Saturday, 5 June 2021

ஆகபெரும் அதிசயம் அருவி

“Waterfalls are exciting because they have power, they have rainbows, they have songs, and they have boldness and craziness!” - Unknown

அருவி ஒர் அதிசயம் ! அருவி ஒர் ஆச்சரியம் !! உன்னை நீ யார் என்று அறிந்து கொள்ள ஒரு அருவியின் அருகில் அமர்ந்து அதன் ஓசையை கேட்க வேண்டும் என எங்கோ படித்த நினைவு. எவ்வளவு உயரத்தில் இருந்து அருவி கீழ் நோக்கி விழுந்தாலும், அது மீண்டும் தன் பயணத்தை நிறுத்தாமல் தனக்கான பாதையை உருவாக்கி கொண்டு முன்னோக்கி செல்லும். அது தான் அந்த அருவி நமக்கு கற்றுக் கொடுக்கும் வாழ்க்கைக்கான பாடம். அருவியை பார்த்தால் எத்தனை வயது கொண்ட மனிதனும் குழந்தையை மாறி விடுவான். அப்படி நான் போன பயணங்களில் நான் பார்த்த அருவிகள் குறித்தே நான் இங்கே கூற போகிறேன்.

திரைப்படங்களிலும், புகைப்படங்களிலும் மட்டுமே நான் பார்த்த அருவியை முதன் முதலில் எங்கு பார்த்தேன்? என யோசித்து பார்க்கிறேன். என் கல்லூரியின் இரண்டாம் ஆண்டு செமஸ்டர் விடுமுறையை நண்பர்களுடன் கொண்டாட நான் கேரளாவில் உள்ள நண்பன் வீட்டிற்கு சென்றேன். நாங்கள் நண்பனின் வீட்டிற்கு சென்ற அன்று, நண்பன் அகில் தன் தந்தையிடம் எங்களை ஊர் சுற்றி காட்ட அழைத்து செல்வதாக பொய் சொல்லி விட்டு காரில் ஒரு மறைவான மலைப்பகுதியில் இருக்கும் ஒரு அருவிக்கு அழைத்து சென்றான். அந்த அருவியின் பெயர் அருவிக்குழி. கேரளாவில் உள்ள திருவல்லா நகருக்கு அருகில் உள்ள புல்லாடு கிராமத்தில் இருந்து சில கிமீ தொலைவில் ஒரு மலையில் இருக்கும் அருவி. நாங்கள் போன சமயத்தில் யாருமே அருவியில் இல்லை. நானும் என் நான்கு நண்பர்கள் மட்டுமே ஒரு மணி நேரத்திற்கும் மேல், அந்த அருவியில் ஒரு ஆனந்த குளியல் போட்டோம். என் வாழ்க்கையில் முதன்முறையாக அருவியை பார்த்த சந்தோஷத்தில், அந்த நாள் ஒரு சிறந்த நாளாக அமைந்தது. பின்னொரு சந்தர்ப்பத்தில் நான் மீண்டும் அதே அருவிக்கு நண்பர்களுடன், சில ஆண்டுகளுக்கு பிறகு சென்று வந்து இருக்கிறேன். 

செப்டம்பர் 2016. நானும் என் கல்லூரி நண்பர்களும் சேலம் மாவட்டம் ஏற்காட்டிற்கு ஒரு பயணம் சென்று இருந்தோம். அப்பொழுது ஏற்காட்டில் ஒரு அருவி இருப்பதாக கேள்விப்பட்டு, அதை பார்த்தே ஆக வேண்டும் என அந்த அருவிக்கு செல்லும் பாதையில் நாங்கள் காரில் சென்றோம். காரை ஒரு இடத்தில் பார்க் செய்து விட்டு சரிவான பாதையில் ஒரு கிமீ தூரத்தை நடந்தே, பல நூறு படிக்கட்டுகளை கடந்து சென்றால் பல நூறு அடி தூரத்தில் இருந்து விழும் அருவியை கண்டோம். ஆனால் ஏனோ எனக்கு அங்கு குளிக்கவே பிடிக்கவில்லை. வெறும் அந்த அருவியில் இருந்து கொட்டும் தண்ணீரின் அழகை மட்டும் ரசித்து விட்டு திரும்பி வந்து விட்டேன். அதன் பிறகு நான் ஏற்காடு செல்லும் போதெல்லாம் கிள்ளியூர் அருவிக்கு மறக்காமல் விசிட் செய்வேன். ஆனால் அங்கு குளித்து மகிழ மட்டும் இதுவரை தோன்றியதே இல்லை. அதற்கான காரணம் மட்டும் இதுவரை எதற்கு? ஏன்? என்று புரியாமலே, ஒவ்வொரு முறை ஏற்காடு மலையில் இருந்து இறங்கி வந்து விடுகிறேன்.

தமிழகத்தில் அருவிகள் என்றாலே அது குற்றாலம் தான் பேமஸ். ஜூன் முதல் ஆகஸ்டு வரை குற்றாலத்தில் சீசன் களை கட்டும். அப்படி ஒரு சீசன் காலத்தில் தான் நான் முதன் முதலாக குற்றாலத்திற்கு சென்றேன். என் கல்லூரி நட்பு நஷீரா வின் திருமணத்திற்காக நாங்கள் தென்காசி க்கு சென்று இருந்தோம். அப்போது நாங்கள் செங்கோட்டையில் உள்ள நஷீரா வின் பாட்டி வீட்டில் தங்கி இருந்தோம். நானும் நண்பன் செந்தில்குமாரும் இரவு உணவு வாங்க ராயல் என்ஃபீல்டு பைக் எடுத்து கொண்டு பார்டர் கடை பரோட்டா வாங்க சென்றோம். தீடீர் யோசனையாக நானும் அவனும் பைக்கை முறுக்கி கொண்டு, குற்றாலம் ஆறு கிமீ என்னும் பெயர் பலகை தந்த ஆர்வத்தில், குற்றாலம் நோக்கி பயணப்பட்டோம். சீக்கிரம் ஒரு குளியல் போட்டு விட்டு திரும்பி விட வேண்டும் என திட்டம். மெயின் அருவியில் நாங்கள் போன நேரத்தில் கூட்டமும் இல்லாத காரணத்தால் சீக்கிரம் குளித்து விட்டு செங்கோட்டையில் நாங்கள் தங்கி இருந்த வீட்டிற்கு திரும்பினோம். ஆனால் அருவியில் குளிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில், பாக்கெட்டில் இருந்த மொபைலை பிளாஸ்டிக் கவரில் ஒழுங்காக சுற்றி வைக்காமல், அப்படியே குளிக்க சென்றதால் மொபைலும் என்னுடன் சேர்ந்து குற்றால அருவியில் குளித்து விட்டது. நாங்கள் அருவிக்கு சென்று வந்த கதை தெரிந்து நண்பர்கள் கடுப்பு ஆனது எல்லாம் தனிக் கதை. பின்னொரு சந்தர்ப்பத்தில் நானும் என் கல்லூரி ஜூனியர் பிரதீப்பும், குற்றாலத்தில் உள்ள பிரதீப்பின் வகுப்பு தோழியும், என் ஜூனியருமான ஷீலா வீட்டிற்கு சென்ற போது நான் மீண்டும் குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, பழைய அருவி, புலி அருவி, ஐந்தருவி என பல அருவிகளுக்கு சென்று குளித்து மகிழ்ந்தோம். அண்மையில் என் வாட்ஸ்சப் நட்பு கௌஷல்யா உடன் குற்றாலம் சென்று இருந்த போது ஆர்ப்பரித்து கொட்டிய அருவியில் கொரோனா பரவல் காரணமாக குளிக்க தடை என்ற அறிவிப்பால் அருவியில் குளிக்காமலே ஏமாற்றத்துடன் திரும்பி வந்தோம். என்றுமே குற்றாலம் தரும் குதுகாலம் தனி அழகு. பலருக்கு அருவி குளியல் என்றாலே குற்றாலம் தான் நினைவுக்கு வரும். எத்தனை முறை குளித்தாலும் சலிக்கவே சலிக்காத  அருவிகள் நிறைந்த ஊர் குற்றாலம்.


ஒரு அருவியை காண பல கிமீ நடந்து, பின்பு அருவிக்கு செல்லும் நேரம் முடிந்து விட போகிறது என பல கிமீ ஒடி போன நினைவு உங்களுக்கு உண்டா? எனக்கு உண்டு. கேரள மாநிலம் திருவனந்தபுரத்திற்கு அருகில் உள்ளது பொன்முடி மலை. நான் நண்பர்களுடன் பொன்முடி மலைக்கு சென்று இருந்த போது, திரும்பி செல்ல இருந்த பேருந்தை மிஸ் செய்து விட்டோம். மலையின் அடிவாரத்தில் இருக்கும் அருவிக்கு சென்றே தீர வேண்டும் என மனதில் ஒரு எண்ணம். ஆனால் அங்கு செல்ல அந்த நேரத்தில் பேருந்தே இல்லை. அடுத்த பேருந்தில் சென்றால் அதற்குள் அருவிக்கான பார்வையாளர்கள் நேரம் முடிந்து அருவிக்கான என்ட்ரி க்ளோஸ். பல கிமீ நடந்தே வந்து, பலரிடம் லிப்ட் கேட்டு யாருமே உதவ முன்வராமல் எப்படியோ நான் நண்பர்களுடன் மலையடிவாரத்திற்கு வந்து சேர்ந்தேன். அருவிக்கு செல்ல டிக்கெட் கவுன்டரில் டிக்கெட் எடுத்து ஒரு கிமீ தொலைவில் இருக்கும் அருவியை காண நான் மட்டும் தனியே ஓடி போகிறேன். எப்படியோ அந்த அடர்ந்த காட்டிற்குள் தனியே ஆர்ப்பரித்து கொட்டும் அருவியை கண்ட போது, மனதில் ஏற்பட்ட சந்தோஷத்தை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. அது தான் நமக்கு அருவி தரும் ஆனந்தம். அந்த அருவியின் பெயர் பொன்முடி மலையடிவாரத்தில் உள்ள மீன்முட்டி அருவி. 

இதுவரை நான் பார்த்த அருவிகளிலேயே எது சிறந்த அனுபவம் என்று என்னை கேட்டால், நான் சற்றும் யோசிக்காமல் கொல்லிமலையில் உள்ள ஆகாயகங்கை அருவிக்கு நான் முதன்முதலில் சென்ற அனுபவத்தையே செல்லுவேன். அதற்கான காரணம் நான் அந்த அருவிக்கு போன நேரத்தில் அது ஆர்ப்பரித்து கொட்டிய அந்த காட்சி, இன்றுவரை என் கண்ணில் அப்படி நீங்காமல் நிறைந்து இருக்கிறது. நானும் நண்பன் ஹரிஷும் சதுரகிரி, குலசை தசரா வுக்கு சென்று விட்டு சென்னை திரும்பும் வேளையில் திடீர் பயணமாக கொல்லிமலை க்கு செல்லலாம் என திட்டமிட்டோம். நாங்கள் சென்ற சென்னை ரயிலில் இருந்து மதுரையில் இறங்கி, அங்கு இருந்து பெங்களூர் செல்லும் ரயிலில் நானும் அவனும் நாமக்கல் நோக்கி சென்றோம். தூக்க கலக்கத்தில் நாமக்கலில் இறங்காமல் அடுத்த ரயில் நிலையமான ராசிப்புரத்தில் சென்று இறங்கினோம். ராசிப்புரம் பேருந்து நிலையம் சென்று அங்கு இருந்து கொல்லிமலையில் உள்ள அறப்பளீஸ்வரர் கோவிலுக்கு நேரடியாக செல்லும் பேருந்து இருப்பதாக கேள்விப்பட்டு, அந்த பேருந்து வரும் வரை அந்த அதிகாலை வேளையில் காத்திருந்து பேருந்தில் ஏறி கொல்லிமலை பயணத்தை தொடர்ந்தோம். காரணம் அந்த கோவிலின் எதிரில் தான் ஆகாயகங்கை அருவிக்கு செல்லும் பாதையின் என்ட்ரி பாயிண்ட் உள்ளது. நாங்கள் அந்த கோயிலின் வாசலில் பேருந்தில் இருந்து இறங்கி ஆகாயகங்கை அருவிக்கு செல்லும் மலைப்பாதையில் உள்ள டிக்கெட் கவுன்டரில் டிக்கெட் எடுத்து விட்டு நானும் ஹரிஷும் மலையில் இருந்து இறங்க தொடங்கினோம். நேர்த்தியாக கட்டப்பட்ட படிக்கட்டுகள் என்றாலும் சரிவான பாதை நமக்கு ஒருவித சோர்வை தந்தது. சிறிது தூரம் உட்கார்ந்து ஓய்வு எடுத்து விட்டு பின்பு பயணத்தை தொடர்ந்தோம். அரை மணி நேரத்திற்கும் அதிகமான பயணத்தில் நாங்கள் அருவியை அடைந்தோம். ஏன் ! இந்த அருவி விசிட் எனக்கு ஆல்டைம் ஸ்பெஷல் என்றால் நாங்கள் சென்ற நேரத்தில் அந்த அருவி இருக்கும் மலைப் பகுதியில் பெய்த மழையால் அருவியில் நீர் ஆக்ரோஷமாக ஆர்ப்பரித்து கொட்டியது. அருவியின் சாரலில் நாங்கள் முழுவதுமாக நனைந்து விட, அருவியின் அருகில் செல்ல அனைவரும் பயந்த நொடியில், நான் அருவியின் மிக அருகில் சென்று பல நூறு அடி உயரத்தில் இருந்து கொட்டும், பால் அருவி போன்ற அருவியின் ஆக்ரோஷத்தை அருகில் இருந்து ரசித்தும் , அருவியின் முன் உரக்க கத்தியும் மகிழ்ந்தேன். நாங்கள் தான் அன்றைய நாளில் அருவிக்கு கடைசியாக சென்றவர்கள். அதன் பிறகு நீரின் வேகம் அதிகரித்த காரணத்தினால் வனத்துறையால் அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. நாங்கள் மட்டும் அருவி ஆர்ப்பரித்து கொட்டும் அழகை அரை மணி நேரத்திற்கும் மேல் அங்கு இருந்து ரசித்து விட்டு , அதன் சாரலிலேயே முழுவதுமாக நனைந்து, மீண்டும் மலை ஏறி ஆகாயகங்கை அருவியில் இருந்து விடைபெற்று சென்றோம். அருவியின் முன் நின்று நாம் மனதில் நினைத்து வேண்டி கொள்ளும் காரியம் நிறைவேறும் என்ற நம்பிக்கையும் உண்டு என அங்கு இருந்த சிலர் கூறினார்கள். அண்மையில் பெரம்பலூரில் இருந்து நண்பன் நிவாஸ் உடன் கொல்லிமலைக்கு பைக்கில் நாங்கள் சென்ற போது ஆகாயகங்கை அருவிக்கு செல்ல கொரோனா பரவல் காரணமாக அனுமதி இல்லை என்று கூறியதால் அருகில் இருந்த ஆற்றில் சிறு சிறு அருவி போல ஆர்ப்பரித்து கொட்டிய நீரில் குளித்து மகிழ்ந்தோம். கொல்லிமலையில் உள்ள ஆகாயகங்கை அருவி அனைவரும் அவசியம் பார்த்து ரசிக்க வேண்டிய அருவி. 


கேரளாவில் உள்ள "தென்னிந்தியாவின் நயாகரா" என அழைக்கப்படும் அத்திரப்பள்ளி அருவிக்கு ஒருமுறை 2017ஆம் ஆண்டின் மே மாதத்தில் சென்று வந்து இருக்கிறேன். சாலக்குடி ஆற்றின் நடுவே பரந்து விரிந்து, மலையின் மேல் இருந்து ஆர்ப்பரித்து கொட்டும் அருவியை அருகில் இருந்து பார்ப்பது அவ்வளவு ரம்மியமாக இருக்கும். பாகுபலி, பையா, வேட்டைக்காரன், புன்னகை மன்னன் என பல திரைப்படங்களில் இடம் பெற்ற அருவி அது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திற்பரப்பு அருவிக்கு நண்பர்களுடன் சில முறை சென்று இருக்கிறேன். அண்மையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொடிவேரி அருவிக்கு சென்று வந்தேன். இதே போல தேனி மாவட்டத்தில் உள்ள அணைபிள்ளையார் அருவிக்கு சில மாதங்களுக்கு முன்பு சென்று வந்தேன். இந்த மூன்று அருவிகளும் மிகவும் சிறிய உயரத்தில் இருந்து ஆற்றின் நடுவே இருந்து கொட்டும் அருவிகள். அருவிகள் எல்லாமே ஆறுகள் அல்லது ஓடைகள் நடுவே தான் அமைந்து இருக்கிறது. 

ஒருமுறை கோவா சென்று விட்டு சென்னைக்கு ரயிலில் திரும்பும் போது கோவா கர்நாடக எல்லையில் ஒரு அருவியை கண்டு ஆச்சரியப்பட்டு போனேன். அந்த அருவியின் பெயர் தூத்சாகர். சென்னை எக்ஸ்பிரஸ் திரைப்படத்தில் இந்த அருவியின் காட்சியை சிறப்பாக காட்சிப்படுத்தி இருப்பார்கள். மலை மீது இருந்து பால் அருவியாக கொட்டுவது போன்ற காட்சி அந்த ரயில் பயணத்தை இன்னும் அழகு ஆக்கியது. இப்படி பல அருவிகள் நாம் ரயிலிலே அல்லது சாலைப்பயணம் செய்யும் போது நம் பாதையில் குறுக்கிடும் குறிப்பாக மழைக்காலங்களில். இதே கோவா பயணத்தில் ஒரு அருவியை பார்க்க பல கிமீ பைக் ரைட் போய் தண்ணீர் இல்லாத வற்றிய அருவியை பார்த்து ஏமாற்றத்துடன் திரும்பிய அனுபவமும் எனக்கு உண்டு. எல்லா அருவிகளும் குளிக்க ஏற்ற வகையில் இருக்காது. அருவிகள் எப்படி பார்க்க அழகாக இருக்கிறதோ அதே அளவு ஆபத்தானவையும் கூட. அப்படி சிறுத்தை நடமாட்டம் உள்ள மற்றும்  ஆழமும், சுழல்கள் நிறைந்த அருவிக்கு நண்பன் விஜய் ஆனந்த் உடன் சென்று இருந்தேன். அந்த அருவி திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் - பழனி சாலையில் இருந்து இடதுபுறம் திரும்பி இரண்டு கிமீ தொலைவில் ஒரு மலையடிவாரத்தில் உள்ள தலைக்குத்து என்னும் அருவி. அதன் அழகை ஆபத்தோடு சேர்த்து பார்த்து ரசித்து வந்தேன். 


நான் செல்லும் பயணங்களில் எங்கெல்லாம் அருவிகள் இருக்கிறதோ அங்கெல்லாம் தவறாமல் சென்று வந்து விடுவேன். பல அருவிகளுக்கு செல்ல வேண்டும் என்ற என் கனவு பட்டியல், தமிழகத்தில் இருக்கும் அருவிகளில் இருந்து அமெரிக்கா கனடா எல்லையில் உள்ள அருவி வரை நீள்கிறது. விரைவில் இந்த கொரோனா பெரும் தொற்று முடிந்த பின்பு என் பட்டியலில் உள்ள அருவிகளுக்கு எல்லாம் நிச்சயம் ஒரு விசிட் சென்று வர வேண்டும் என ஒரு ஆசை எனக்கு உண்டு. நீங்களும் அருவி தரும் ஆனந்ததையும் ஆச்சரியத்தையும் வாய்ப்பு கிடைக்கும் போது எல்லாம் பெற்று கொள்ளுங்கள். 

"There is a hidden message in every waterfall. It says, if you are flexible, falling will not hurt you!"

- பயணங்கள் தொடரும்.

(This blog article is dedicated to my Junior friend Sneha Saji, one who reads my blog articles continuously by translating the article from Tamil to English using Google Translate from Muscat, Oman)

Monday, 17 May 2021

அன்ரிசர்வ்டு பயணி

இது ஒரு அன்ரிசர்வ்டு பயணியின் கதை.

இந்த கொரோனா பெரும் தொற்று காலத்திலும், நான் தவறாமல் சில பயணங்களை போய்ட்டு தான் வந்தேன். அப்போ எல்லாம் நான் ரொம்ப மிஸ் பண்ண விஷயம் என்ன தெரியுமா? அது ! நான் திடீர் என்று கிளம்பி போகும் அன்ரிசர்வ்டு கோச் ரயில் பயணத்தை தான். நான் இந்த மாறி பயணம் போன கதையை பலரிடம் சொல்லும் போது தான் எனக்கு தெரியும், என்னை போல ரயிலில் அன்ரிசர்வ்டு பெட்டியில பயணமே போனது இல்லை பலர். ஆனா நான் போன பெரும்பாலான பயணங்களுமே அன்ரிசர்வ்டு கோச்ல தான் , இந்த கொரோனா பெரும் தொற்று காலத்துக்கு முன்னாடி வரைக்கும். அதனால தான் என் பெயர் அன்ரிசர்வ்டு பயணி.

நான் போன முதல் ரயில் பயணம் எப்போ னு யோசிச்சி பார்க்கும் போது, என் நினைவுக்கு தெரிந்து அது என்னுடைய அப்பா பிறந்து வளர்ந்த ஊரான திண்டிவனத்திற்கு குடும்பமாக பொங்கல் பண்டிகையை கொண்டாட நாங்க போன அன்ரிசர்வ்டு கோச் பயணம். நான் எம்சிசி கல்லூரியில் சேரும் முன் நான் போன ஒரே ரயில் பயணம் இந்த தாம்பரம் - திண்டிவனம் ரயில் பயணம் மட்டும் தான். ஏன் நான் என் எம்சிசி கல்லூரியில் சேருவதற்கு முன் வரை னு இங்க சொல்றேனா, அதுக்கு காரணம் என் நெடும் பயணங்கள் எல்லாமே நான் சென்னைக் கிறித்தவக் கல்லூரியில் படிக்க சேர்ந்த பின் தான் தொடங்கியது. 

கல்லூரி நண்பர்கள் உடன் நான் போன முதல் பயணம் என் கல்லூரி நட்பான கேரளத்தில் இருந்து சென்னை வந்து படித்த அகில் இம்மானுவேல் வீட்டிற்கு, என் கல்லூரி வகுப்பு தோழர்கள் ஆஷிஷ் டேனியல், சாமுவேல் லிவிங்ஸ்டன் மற்றும் பில் கிளின்டன் உடன் திருவல்லா என்னும் நகரத்திற்கு சென்று அங்கு இருந்து அருகில் இருக்கும் புல்லாடு என்னும் கிராமத்திற்கு சென்ற அன்ரிசர்வ்டு கோச் பயணம் தான். அன்று எனக்கு பிடித்து போன இந்த பயணம் இன்று வரை தொடர்கிறது. ஏன் எனக்கு அன்ரிசர்வ்டு பயணங்கள் பெரிதும் பிடித்து போனது என்றால், அதில் எனக்கு இருக்கும் சௌகரியங்கள் தான் காரணம். ஆனால் அந்த காரணங்கள் மற்றவர்களுக்கு பொருந்துமா என்றால் கண்டிப்பாக எனக்கு தெரியாது. தீடீர் யோசனையில் நான் கிளம்பி போன பயணங்கள் எல்லாமே அன்ரிசர்வ்டு கோச் பயணங்கள் தான். ஏற்கனவே திட்டமிட்டு புக் செய்து பயணம் செல்வதில் எல்லாம் எனக்கு விருப்பமே இல்லை. ஆனால் பின்னொரு சந்தர்ப்பத்தில் முன்பதிவு செய்து நான் ரயில் பயணம் செய்த போது தான் தெரிந்தது, அன்ரிசர்வ்டு பயணம் எனக்கு தந்த ஆனந்தத்தை, புதிய உறவுகளை, நினைவுகளை இந்த முன்பதிவு செய்து பயணம் செய்த பயணங்கள் பாதி கூட தரவில்லை. நடுராத்திரி ஆனாலும் விளக்கு அணைக்காமல் யார் என்று தெரியாத மனிதர்கள் உடன், கதை பேசிக் கொண்டே நமக்கு தோணும் போது தூங்கி பயணப்பட்ட அன்ரிசர்வ்டு பயணங்கள் எங்கே? இரவு 10.30 மணி ஆனால் விளக்கை அணைக்க சொல்லி தூங்க சொன்ன ரிசர்வ்டு கோச் பயணங்கள் எங்கே? பெரும்பாலும் ரிசர்வ்டு கோச்சில் பயணம் செய்பவர்கள் அதிகம் யாருடனும் பேசாமல் தூங்கி விடுவார்கள். ஆனால் அன்ரிசர்வ்டு பயணங்களில் ஒரு சிலரை தவிர பலரிடம் பேசிக்கொண்டே எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பயணம் செல்லலாம். தாம்பரத்தில் ஒரு அன்ரிசர்வ்டு கோச் டிராவலுக்கு ஒரு டிக்கெட் எடுத்தால் நினைத்த ஸ்டேஷனில் இறங்கி நினைத்த நேரத்தில் வெவ்வேறு ரயிலில் ஏறி பயணம் செய்த பயணங்களை மீண்டும் செல்ல வேண்டும் என மனதில் ஒரு ஆசை.

அன்ரிசர்வ்டு பயணங்களில் நமக்கான இருக்கையை எவ்வளவு கூட்டம் இருந்தாலும் சாமர்த்தியமாக யாரிடமாவது பேசிப் பேசியே வாங்கி விடுவேன். அது ஒரு கலை என்றே சொல்லலாம். பலரிடம் சண்டை செய்து எல்லாம் வாங்கி இருக்கிறோம். நான்கு பேர் அமரும் இருக்கையில் ஐந்து அல்லது ஆறு பேர் அமர்ந்தும், லக்கேஜ் வைக்க இருக்கும் மேல் சீட்டில் படுத்து இருக்கும் நபரின் தூக்கத்தை தட்டி எழுப்பி நாம் அந்த சீட்டை உட்கார பயன்படுத்துவது, கால் வலி எடுத்தால் அப்படியே கீழே இருக்கும் இடத்தில் உட்கார்ந்து பயணிப்பது, தூக்கம் வந்தால் அப்படியே கீழே சீட்டுக்கடியில் படுப்பது என அன்ரிசர்வ்டு பயணங்களில் என்றுமே எனக்கான சௌகரியத்தை ஏற்படுத்தி கொண்டு தான் நான் தனியாகவும், என் நண்பர்களுடன் பயணித்து இருக்கிறேன். இந்த அன்ரிசர்வ்டு பயணங்கள் எனக்கு கொடுத்த நினைவுகள் ஏராளம். அதில் சிலவற்றை என்னால் எப்பொழுதுமே மறக்க முடியாத நினைவுகள்.

வால்பாறை மலைக்கு செல்ல நான் தனியே சென்னையில் இருந்து கோவைக்கு அன்ரிசர்வ்டு கோச் சில் பயணம் செய்த போது, என்னுடன் கதைகள் பல பேசிக் கொண்டே பல பயண டிப்ஸ் கொடுத்த கோவை ஜெயசுந்தரம் அண்ணா வை எப்படி மறக்க முடியும்? நள்ளிரவில் திருச்சியில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் ரயிலில் அன்ரிசர்வ்டு கோச் சில் ஏறிய நான், தூக்க கலக்கத்தில் ரயிலின் வாயிலிலேயே படுத்து உறங்கி காலையில் தூங்கி எழுந்த போது, என் அருகில் அமர்ந்து இருந்த 1964 ஆண்டு ராமேஸ்வரம் தனுஷ்கோடியை தாக்கிய புயலில் உயிர் தப்பிய மண்டபம் சந்திரன் தாத்தா வை எப்படி மறக்க முடியும்? தாம்பரத்தில் இருந்து திருச்சி வரை உட்கார கூட இடம் இல்லாமல் நின்று கொண்டே செங்கோட்டை எக்ஸ்பிரஸ் அன்ரிசர்வ்டு கோச் சில் பயணம் செய்த ஒரு குடும்பத்தில், என்னுடன் நின்று கொண்டே பயணித்தும் உரையாடியும் வந்து, நான் ரயிலை விட்டு இறங்கும் போது உன் எதிர்கால பார்ட்னர் ரொம்பவும் கொடுத்து வச்சவ ! என்று அந்த அக்கா எதற்கு சொன்னார்கள் என்றே தெரியாமல் நான் இறங்கி போனேனே, அந்த பெயர் தெரியாத தென்காசிக்கு போன அம்மு அக்காவை எப்படி மறக்க முடியும்? பஞ்சாப்பில் இருந்து சத்தீஸ்கர் செல்லும் ரயிலின் அன்ரிசைர்வ்டு கோச் சில் லக்கேஜ் வைக்கும் இடத்தில் ஏறி அமர்ந்து, டெல்லியில் இருந்து ஆக்ரா சென்ற போது என்னுடன் பயணித்த அவர்கள் பேசிய ஹிந்தி புரியாமல் கூகுள் டிரன்ஸ்லேடர் உதவியுடன் நான் அவர்களுடன் ஆங்கிலம் டூ ஹிந்தி டிரன்ஸ்லேஷனில் மொபைல் வழியே உரையாடி சென்ற தர்மேந்திர மற்றும் கோமல் சகோதர்களை எப்படி மறக்க முடியும்? கோவையில் இருந்து என் நண்பர்களுடன் நான் நாகர்கோவில் க்கு அன்ரிசர்வ்டு கோச் சில் பயணம் செய்த போது, ஈரோட்டில் இருந்து அம்பாசமுத்திரத்திற்கு ஒரு கல்யாணத்திற்கு சென்ற திருமணமான அக்கா தங்கை மற்றும் அவர்களின் இரு மகள்கள் என  எங்களுடன் இரவு முழுவதும் உறங்காமல் தம் ஷரத்ஸ் விளையாடியும் பல கதைகள் பேசியும் வந்த பெயர் தெரியாத அந்த குடும்பத்தை எப்படி மறக்க முடியும்? சேலத்தில் இருந்து சென்னை செல்லும் ரயிலில் அன்ரிசைர்வ்டு கோச் சில் இடம் பிடிக்க ப்ளாட்பாரத்திற்கு அப்பொழுது தான் வந்த ரயிலின் கதவுகள் திறக்கப்படாத காரணத்தினால், திறந்து இருந்த எமர்ஜென்சி எக்ஸிட் வழியே உள்ளே பாய்ந்து இடம் பிடித்த நினைவை எப்படி மறக்க முடியும்? கையில் காசு இல்லாமல் கேரளாவின் சாலக்குடியில் இருந்து சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் அன்ரிசர்வ்டு கோச் சில், நான் முதன் முறையாக வித் அவுட் டிக்கெட்டில் பயணம் செய்த பயணத்தை எப்படி மறக்க முடியும்? ராமேஸ்வரத்தில் இருந்து கன்னியாகுமரி செல்லும் ரயிலின் அன்ரிசர்வ்டு கோச் சில் ஏறி தூக்க கலக்கத்தில் நன்றாக உறங்கி விட கன்னியாகுமரி சென்ற ரயிலில் இருந்து அனைவரும் இறங்கி விட நான் மட்டும் அன்ரிசர்வ்டு கோச் சில் நல்ல தூக்கத்தில் இருக்க , என்னை எழுப்ப போலீஸ் லத்தியில் காலையிலேயே அடி வாங்கி நான் எழுந்த காலை பொழுதை எப்படி மறக்க முடியும்? வர்கலாவில் இருந்து திருவனந்தபுரம் செல்ல அன்ரிசர்வ்டு டிக்கெட் எடுக்க கவுன்டருக்கு சென்ற போது டிக்கெட் தரும் அக்கா நாங்கள் பேசிய தமிழை பார்த்து,  எங்களுடன் தமிழில் பேசி , என்னடா ஊர் ஊரா சுத்துறீங்களா? பார்த்து பத்திரமா வீடு போய் சேருங்க அப்படி னு எங்கள் அக்கறைப்பட்ட அம்பத்தூர் சேர்ந்த அக்கா வை எப்படி மறக்க முடியும்? நடுங்கும் குளிரில் நான் பஞ்சாப் நோக்கி பயணப்பட டெல்லி ரயில் நிலையத்தில் அன்ரிசர்வ்டு டிக்கெட் எடுத்து காத்து இருந்த போது, என்னை போலவே ஹிந்தி மொழி தெரியாமல் கோவா விற்கு எப்படி செல்வது என தெரியாமல், தனியே தவித்து கொண்டிருந்த பிரேசில் நாட்டை சார்ந்த சூ என்னும் சூலேன்  காப்புரிசே என்னும் வெளிநாட்டு பெண்ணுடன் எனக்கு ஏற்பட்ட நட்பை எப்படி மறக்க முடியும்?மேட்டுபாளையத்தில் இருந்து ஊட்டிக்கு மலை ரயிலில் அன்ரிசர்வ்டு பெட்டியில் நண்பர்கள் நித்தீஷ், நாகராஜா, சபரி உடன் சென்ற பயணத்தை எப்படி மறக்க முடியும்? கல்கா வில் இருந்து சிம்லா விற்கு ஹிமால்யன் மலை ரயிலில் அன்ரிசர்வ்டு கோச் சில் இடம் கிடைக்காமல் படியில் அமர்ந்து பின்பு சரக்கு பொருட்கள் ஏற்றி செல்லும் பெட்டியில் நின்று கொண்டு சென்ற மலை ரயில் பயணத்தை எப்படி மறக்க முடியும்? தனியே நான் போன ரயில் பயண இப்படி அன்ரிசர்வ்டு கோச் ரயில் பயணங்கள் எனக்கு அறிமுகப்படுத்திய மனிதர்கள், கொடுத்த மறக்க முடியாத நினைவுகள் எல்லாம் என்றுமே என்னால் மறக்கவே முடியாத விஷயங்கள்.

அன்ரிசர்வ்டு கோச் ரயில் பயணம் சென்றவர்கள் பெரும்பாலும் சிரமங்களை பல கடந்தே தாங்கள் செல்லும் ஊருக்கு சென்று சேருவார்கள். ஏனெனில் அந்த பயணங்காள் அவ்வளவு கடினமான அனுபவத்தை கொடுக்கும், குறிப்பாக பெண்களுக்கு. ஆனால் எனக்கும் பல நேரத்தில் கஷ்டமாக இருந்த இந்த பயணங்கள் , அதே வேளையில் அந்த பயணம் தந்த ஒருவித குதுகலத்தில் நான் பெரும்பாலும் அன்ரிசர்வ்டு கோச் ரயில் பயணங்களையே தொடர்ந்து மேற்கொண்டு இருக்கிறேன். இனியும் அவ்வாறே என் பயணங்கள் தொடரும். நீங்களும் வாய்ப்பு இருந்தால் ஒரு அன்ரிசர்வ்டு கோச் ரயில் பயணம் ஒன்னு இந்த கொரோனா பெரும் தொற்று பாதிப்பின் தாக்கம் முடிந்த உடன் போய் வாருங்கள். 

- பயணங்கள் தொடரும்! 

Sunday, 28 March 2021

திடீர் பயணம் ! திரில்லிங் அனுபவம் - சதுரகிரி

6.10.2019
ஒரு பயணம் போகனும் அப்படி னு அன்னைக்கு காலையில இருந்தே ஒரே யோசனை. அதற்கான காரணம் ஆயூத பூஜை தொடர் விடுமுறை. நானும் எங்கயாவது போலாம் னு யோசனையில் இருக்கும் போது தான், நான் பல நாள் போகனும் னு ஆசைப்பட்ட ஒரு மலைக்கு டிரேக்கிங் போகனும் னு முடிவு பண்ணேன். அதற்கு மற்றொரு காரணம் நான் பார்த்த செய்தி. அந்த செய்தியில் நான் போகனும் ஆசைப்பட்ட மலையில் ஏற நான்கு நாட்கள் அனுமதி அப்படிங்குற நியூஸ். ஆனா நாம நினைக்கிற மாறி ஈசியால அந்த மலை மேலே ஏறி போய்ட்டு வர முடியாது. மாதத்தின் சில தினங்கள் மட்டுமே வனத்துறை அனுமதி, அதுவும் மழை பெய்யாமல் இருக்க வேண்டும். மழைக்காலங்கள் அப்போ அந்த டிரேக்கிங் பாதையின் குறுக்கே ஓடும் சிற்றோடையில வெள்ளப்பெருக்கு ஏற்படுமாம். அந்த மலை பயணம் கொஞ்சம் ரிஸ்க்கான பயணம் வேற. தனியாவே டிரிப் போயிட்டு இருந்த நான், நம்ம கூட ஒருத்தர கூட்டிட்டு போவோம் னு முடிவு பண்ணி, அந்த ஒருத்தர் யார் னு முடிவு பண்ண என் வாட்சப்ல ஒரு ஸ்டேடஸ் போட்டேன்.

 "டிரேக்கிங் லவ்ர்ஸ், நெக்ஸ்ட் டூ டேஸ்" - இதான் அந்த ஸ்டேட்ஸ்.

 நான் ஸ்டேட்ஸ் போட்ட அடுத்த நிமிடமே என் கல்லூரி ஜூனியர் தம்பி ஹரிஷ் வெங்கடாஜலபதி, "நான் வரேன் அண்ணா" னு ரிப்ளை பண்ணான். நானும் அவன் கிட்ட வெயிட் பண்ணுடா னு சொல்லிட்டு, டிரிப் பத்தின யோசனையில் இருந்த அப்போ தான் இன்னொரு ஜூனியர் தம்பி க்ளின்டன் கிறிஸ்டி ராஜ் ரிப்ளை பண்ணான், "அண்ணா! எங்க எப்போ வரனும்?" அப்படி னு. நான் நீண்ட யோசனைக்கு பிறகு இருவரையும் என்னுடன் கூட்டிட்டு போகலாம் னு முடிவு பண்ணிட்டு, ஈவ்னிங் மீட் பண்ணுவோம் அப்படினு என்னுடைய திடீர் பயணத்துக்கு தயார் ஆனேன். அப்போ தான் ஒரு டிவிஸ்ட். என் கூட டிரிப் க்கு வரேன் அப்படினு சொன்ன க்ளின்டனை தொடர்பு கொண்ட போது, தொடர்பு எல்லைக்கு வெளியே உள்ளார் அப்படி னு ரிப்ளை வர,  அவனுக்காக வெயிட் பண்ணிட்டே இருக்கும் போது அவனை என்னால் காண்டக்ட் பண்ண முடியாத காரணத்தால் நானும் ஹரிஷ் மட்டும் அந்த திடீர் பயணத்தை தொடரலாம் அப்படி னு,  தாம்பரம் ல எங்க காலேஜ் முன்னாடி மாலை ஆறு மணிக்கு மீட் பண்றது னு முடிவு பண்ணோம். 

சரியா நானும் ஹரிஷும் தாம்பரம்ல இருக்க எங்க எம்சிசி காலேஜ் முன்னாடி  மாலை ஆறு மணிக்கு மீட் பண்ணோம். நான் போக வேண்டும் என முடிவு செய்து இருந்த ஊருக்கு நான் ரெண்டு டிக்கெட் எடுத்தேன். ஆனா கூட வர தம்பி ஹரிஷுக்கு நான் எங்க அவனை கூட்டிட்டு போறனு தெரியாது. நாங்க ரெண்டு பேரும் புறநகர் ரயில் பிடிச்சி சென்னை எக்மோர் ரயில்வே ஸ்டேஷனுக்கு போய் சேர்ந்தோம். இரவு நேர அன்ரிசர்வ்டு பயணம் அப்படிங்குற காரணத்தால் நாங்க நைட் டின்னர் அந்த ரயில்வே ஸ்டேஷன் பக்கத்துல சாப்பிடலாம் அப்படினு, அவனை ஆல்பர்ட் தியேட்டர் பக்கம் இருக்க ரோட்டோர தள்ளுவண்டி கடைக்கு கூட்டிட்டு போனேன். நாங்க பசியாற சாப்பிட்டுட்டு சென்னை எக்மோர் ரயில் நிலையத்துல தென் தமிழ்நாடு போற ரயில்கள்ல உட்கார இடம் இருக்கா னு செக் பண்ணும் போது, கேரள மாநிலம் கொல்லத்திற்கு நெல்லை, நாகர்கோவில் வழியா போற அனந்தபுரி எக்ஸ்பிரஸ் அன்ரிசர்வ்டு கோச்ல சீட் இருந்ததால எங்களுக்கான இடத்தை பிடிச்சு உட்கார்ந்தோம். அப்போ டைம் ஆரவு 8.10. ரயிலில் அன்ரிசர்வ்டு கோச்ல சீட் கிடைக்குறது நீங்களா கொடுத்து வெச்சிருக்கனும். பல அன்ரிசர்வ்டு பயணங்களில் நான் போராடியே இடம் கிடைத்து இருக்கிறது. வழக்கம் போல எங்களோட கோ பேசஞ்சர்ஸ் உடன் பேச்சு கொடுத்த அப்போ தான் திண்டுக்கல் போற விக்கி என்னும் சிறுவன் நண்பன் ஆனான். அவனுடன் சிறிது நேரம் பேசி விட்டு, அடுத்த நாளின் சாகச பயணத்தை கருத்தில் கொண்டு, உட்கார்ந்த நிலையிலே ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து ஒரு குட்டி தூக்கம் போட்டோம் அந்த அன்ரிசர்வ்டு கோச்ல. 
அதிகாலை நாலு மணிக்கு கூடல் மாநகரான மதுரையை அடைந்தது நாங்க போன அனந்தபுரி எக்ஸ்பிரஸ். ரயிலில் இருந்து இறங்கிய நாங்க மதுரை ரயில் நிலையத்திலேயே எங்களுக்கு கிடைத்த சில நிமிடங்களில் ரிப்ஃரெஷ் ஆயிட்டு, எங்களின் அடுத்த ரயிலுக்காக வெயிட் பண்ணோம். என்னுடன் வந்த நண்பன் ஹரிஷ் க்கு எங்க போகிறோம்? எதுக்காக மதுரையில் இறங்கினோம்? அடுத்த எந்த ரயிலுக்காக வெயிட் பண்றோம்? னு எதுவுமே தெரியாம என்னுடன் பயணத்தின் அடுத்த கட்டத்திற்காக எதற்கும் தயாராக இருந்தான். அப்போ மதுரை ரயில் நிலையத்திற்கு வந்து சேர்ந்த செங்கோட்டை போற பொதிகை எக்ஸ்பிரஸ்ல இருக்க அன்ரிசர்வ்டு பெட்டியில் நாங்க ஏறி எங்களுக்கான சீட் பிடிச்சி உட்கார்ந்தோம். சூரியன் உதித்க ஸ்டாட் ஆன உடனே ரயில் போற வழியில் பரந்து விரிந்து கிடக்கும் வயல்களையும் கிராமங்களையும் பார்க்க நான் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்தேன். அப்போ கரும்புகை கக்க பேரொலி எழுப்பிக்கிட்டே, சிக்குபுக்கு சிக்குபுக்கு னு ரயில் சத்தம் எழுப்பிக்கிட்டே போச்சு. ரயில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரை நெருங்கும் போது என்னுடன் வந்த நண்பன் ஹரிஷிடம் எங்க நாம போறோம் னு ஏதாவது ஐடியா இருக்கா னு கேட்ட அப்போ தென்காசி போறோம்மா? னு என்கிட்ட கேட்டான். நான் அதற்கு எதுவும் ரிப்ளை பண்ணாமல் அமைதியாக அவனுக்கு சர்ப்பிரைஸ் ஆகவே இருக்கட்டும் னு விட்டுட்டேன். ரயில் ஸ்ரீவில்லிபுத்துரை சென்று சேர்ந்ததும் நான் நண்பன் ஹரீஷை ரயிலில் இருந்து இறங்க சொன்னேன். ஆம். நாங்க இறங்க வேண்டிய இடமே ஸ்ரீவில்லிபுத்தூர் தான். நானும் அவனும் அந்த ஊரில் இறங்கி, அங்கிருந்து ஒரு ஷேர் ஆட்டோவில் ஸ்ரீவில்லிபுத்தூர் பஸ் ஸ்டான்ட் க்கு சென்றோம். அந்த பேருந்து நிலையத்தில் நான் போக வேண்டும் என திட்டமிட்டு வந்த அந்த மலைக்கு செல்வதற்கான அடிவாரம் வரை செல்லும் பேருந்திற்கு காத்திருந்த சில நிமிடங்களில் தானிப்பாறை என்னும் அந்த ஊருக்கு வத்திராயிருப்பு வழியாக செல்லும் அந்த பேருந்து வந்து சேர்ந்தது. அதில் ஏறி எங்களுக்கான இருக்கையில் நாங்ள் இருவரும் அமர்ந்து கொண்டோம். பேருந்தில் உள்ள அனைத்து இருக்கைகளும் பயணிகளால் நிரம்பிய உடன் பேருந்து பயணம் இனிதே தொடங்கியது. நாற்பது நிமிடங்களுக்கும் மேலான அந்த பயணத்தில் நாங்கள் இருவரும் தானிப்பாறை என்னும் அந்த கிராமத்திற்கு சென்று சேர்ந்தோம். காலை உணவை அந்த ஊரில் இருந்த ஒரு ரோட்டோர கடையில் இட்லியும் வடையும் சாப்பிட்டு விட்டு எங்களின் அன்றைய சாகச பயணம் தொடங்கியது. ஆமா நிறுத்துடா! எங்க தான் டா அந்த பையன கூட்டிட்டு போற னு நீங்க என்ன கேட்குறது புரியுது. அந்த நண்பன் மனதிலும் அந்த கேள்விகள் அப்போ எழுந்திருக்கலாம். ஆனா அவன் என்கிட்ட கேட்கல. உங்களுக்கு மட்டும் சொல்றேன். நான் அந்த நண்பன கூட்டிட்டு போகனும் என் மனசில் நினைத்து நான் டிரேக்கிங் இப்போ கூட்டிட்டு போக போற மலை பேரு சதுரகிரி.

சதுரகிரி. திசைக்கு நான்கு மலைகள் என்று பதினாறு மலைகள் சமமாகவும், சதுரமாகவும் அமைந்திருப்பதால் இதற்கு சதுரகிரி என்று பெயர் வந்தது. இந்த மலையானது மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள ஒரு மலை. இந்த மலை மீது  சுந்தர மகாலிங்கம் கோவில் மற்றும் சந்தன மகாலிங்கம் கோவில் என இரண்டு கோயில்கள் உள்ளது. அமாவாசை மற்றும் பௌர்ணமி தினங்களுக்கு முன்னும் பின்னும் நான்கு நாட்கள் மட்டுமே இந்த மலை மீது ஏற வனத்துறை பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கிறது. அதுவும் மழை பொழிவு இல்லாமல் இருந்தால் தான். ஏனெனில் மலை மீது ஏறி செல்லும் பாதையின் குறுக்கே பல சிற்றோடைகளை கடந்து செல்கிறது. இந்த மலையை பற்றி எனக்கு தெரிய வர காரணமே மழை காலங்களில் இந்த மலை மீது ஏறிய பக்தர்கள் மீண்டும் கீழே இறங்க முடியாமல் மலையில் சிக்கி கொண்டார்கள் என்பதும் அவர்களை தீயணைப்பு படையினர் மீட்டார்கள் என்ற செய்தியை பார்த்தே. நானும் இந்த பயணத்தை தொடங்கியது திடீர் என்று செய்தியில் பார்த்த சதுரகிரி மலைக்கு பக்தர்கள் அனுமதி என்னும் செய்தியை பார்த்தே. இந்த சதுரகிரி மலைக் கோயிலுக்கு செல்ல மூன்று பாதைகள் உள்ளது. விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ளே தானிப்பாறை என்னும் இடத்தில் தொடங்கும் பாதையும், மதுரை மாவட்டம் சாப்டூர் அருகே உள்ள வாழைத்தோப்பு என்னும் தொடங்கும் பாதையும் மற்றும் தேனி மாவட்டம் வருசநாடு அருகே தொடங்கும் பாதை என மூன்று வெவ்வேறு பாதைகள் உள்ளது. இதில் தானிப்பாறை பாதை எளிதான பாதையாகவும் பெரும்பாலான மக்கள் பயன்படுத்தும் பாதையாக உள்ளது. வாழைத்தோப்பு பாதையும் மற்றும் வருசநாடு பாதையும் கடினமான பாதையாக இருப்பதால் சிலர் மட்டுமே பயன்படுத்துகிறார்கள். நாங்கள் எங்களின் சாகச பயணத்தை தானிப்பாறை பாதையில் தொடங்கினோம். 


சாம்பல் நிற அணில் சரணாலயம் - திருவில்லிப்புத்தூர் என்னும் பெயர் கொண்ட வரவேற்பு நுழைவாயிலில் புகுந்து நாங்கள் இருவரும் நடக்க தொடங்கினோம். அப்போ டைம் காலை 8.55. நாங்க போன பாதையின் இருபுறமும் செடிகள் அடர்ந்து வளர்ந்து இருந்தது. பாதையின் ஓரமாக இருந்த பெரிய பலகைகளை பார்த்த போது தான் தெரிந்தது நாங்கள் பயணப்படுகிற வனம் ஒரு மூலிகைகளால் சூழப்பட்ட தானிப்பாறை மூலிகை வனம் என்று. சூரியன் தன் உக்கிரத்தை லைட்டா ஸ்டாட் பண்ணிச்சு. எங்களின் பத்து நிமிட பயணத்தில் எங்களின் பாதையில் ஒரு சிறு கோயிலை அடைந்தோம். அந்த கோயிலில் பயணம் போற எல்லாரும் சாமி கும்பிட்டுட்டு மலை ஏறினாங்க. அப்போ அந்த கோயிலுக்கு பக்கத்திலேயே ஒரு சிற்றோடை ஓடிச்சு. அதில் சிலர் குடும்பமாக குளித்துக் கொண்டிருந்தார்கள். எங்களுக்கும் ஆசையாய் இருந்தாலும் வெயில் உக்கிரமாக மாறுவதற்கு முன்னால மலை மேல போய் சேரனும் அப்படி னு எங்கள் பயணத்தை தொடர்ந்தோம். நாங்க போன பாதையின் குறுக்கே அப்போ ஒரு சிற்றோடை வந்துச்சு. தண்ணீர் ரொம்ப கம்மியா அதான் அதுல ஓடிச்சு. அதைக் கடந்து நாங்க போன அப்பதான் அந்த செங்குத்தான வழுக்குப்பாறை வந்துச்சு. அந்த வழுக்குப்பாறையின் பக்கத்துல நாங்க ஏற்கனவே பார்த்த அந்த சிற்றோடை ஓடியது. எங்க பாதையில இருந்து கொஞ்சம் ஸ்லிப் ஆனாலும் நாங்க அதுல போய் விழுந்து நமக்கு காயங்கள் ஏற்பட வாய்ப்பிருக்க அளவுக்கு அந்த செங்குத்தான பாறையில் செதுக்கப்பட்டு இருந்த படிக்கட்டுல பார்த்து பொறுமையா ஏறினோம்.
வழூக்குப்பாறை வீடியோ லிங்க் -  https://photos.app.goo.gl/2oceQJy2uF6gULLG9 பாதை ரொம்ப கடினமாக இருந்துச்சு. செங்குத்தா கையில ஒரு தடியை வச்சுக்கிட்டு நாங்க ஏறி போய்க்கிட்டே இருந்தோம். ஒரு மணி நேரம் கூட ஆகி இருக்காது ஆனாலும் நாங்க ரொம்பவே சோர்வடைந்து ஒரு இடத்தில் உட்கார்ந்து ரெஸ்ட் எடுத்தோம். சிறிது நேரம் கழிச்சு நாங்க பயணத்தை தொடர்ந்த அப்போ ஒருவரை ஒரு பெட்ஷீட்டில் கட்டி இருவர் கீழே டோலி கட்டி தூக்கிட்டு போனாங்க. நாங்க அதப்பத்தி விசாரிக்கும் போது தான் பலர் மலை மீது ஏறிட்டு கீழே இறங்க முடியாமலும் சிலர் மலை மீதே கூட இறந்து கூட போய் இருக்காங்க சொன்னாங்க. அப்படி இருக்கவங்கள இப்படி டோலி கட்டி தான் கீழே தூக்கிட்டு போவாங்க னு சொன்னாங்க
டோலி கட்டி தூக்கி செல்லும் வீடியோ லிங்க் - https://photos.app.goo.gl/8nHb3nkbL5FFvoZk9
எங்களின் பயணத்தின் இடையே நாங்க ஒரு மக்கள் அதிகமா கூடி இருந்த ஒரு இடத்தை அடைந்தோம். அங்கே இருந்த ஒரு பாறையில் ஒரு வித மாவால் கோபுரம் போல எழுப்பி அதை வழிப்பட்டு கொண்டு இருந்தார்கள். அப்போது அங்கு இருந்தவர்களிடம் விசாரித்த போது அது கோரக்கர் சித்தரை வழிப்பட்டு கொண்டு இருந்தார்கள். கோரக்கர் தவமிருந்த குகை இந்த மலையில் உள்ளதாகவும் அங்கு செல்ல வனத்துறை அனுமதி இல்லை என்பதும் பின்னர் தெரிய வந்தது. அங்கிருந்து தொடர்ந்து எங்கள் நடந்து செல்லும் வழியில் சலசலத்து ஓடும் நீரின் ஓசையை கேட்டு நாங்கள் எங்களின் பாதையில் இருந்து விலகி அந்த நீரோடையை தேடி சென்ற போது அங்கு மறைந்து இருந்த ஒரு சிற்றருவியை கண்டுபிடித்தோம். அந்த சிற்றருவியில் இறங்கி கால்களை நனைத்து கொண்டு சில புகைப்படங்களை எடுத்து கொண்டு நாங்க தவறவிட்ட பாதையை தேடி பயணத்தை தொடர்ந்தோம். நாங்க போன பாதையில சில இடங்கள் செங்குத்தாகவும், சில இடங்கள் பாறைகள் ஆகவும், சில இடங்கள் மண் பாதையாகவும் ஒரு கலவையாக கடினமாகவும் இருந்துச்சு. அப்போ தான் எங்களுடன் மலையேறிய இருவரிடம் பேச்சு கொடுத்தோம். அவங்க இரண்டு பேரும் சாப்டூர் பக்கம் இருக்க ஒரு கிராமத்தை சேர்ந்தவர்கள். அமாவாசை பௌர்ணமி தினங்களில் மலையேறி அங்கேயே தங்கி சிவனை வழிப்பட்டு விட்டு மறுநாள் மலையில் இருந்து கீழே இறங்குவோம் னு சொன்னாங்க. அவர்கள் கிட்ட பேசிய போது பல சுவாரசியமான கதைகள் நமக்கு கிடைத்தது. இந்த மலையில பல மூலிகைகள் நிறைந்து இருப்பதாகவும் அதை தேடி பலர் இங்க வருவாங்க னு சொன்ன அந்த அண்ணன்கள்,  சென்னையில் இருந்து ஒரு சித்த வைத்தியர் இங்க வந்து ஏதோ மூலிகைகளை வைத்து எய்ட்ஸ்க்கே வைத்தியம் பார்ப்பார் னு சொன்னார். அவர் சொன்ன மற்ற கதைல அண்ணன் சொல்ற ஆமைக்கறி சாப்பிட்டேன் கதை மாறி நம்பவே முடியல. இருந்தாலும் அவங்க கிட்ட இருந்து எங்க பயணத்துக்கு தேவையான பல டிப்ஸ் கிடைச்சிது. நாங்க அந்த அண்ணன்கள் உடன் செல்லும் போது அதில் ஒரு அண்ணன் தான் வைத்திருந்த பீடிக்கட்டில் இருந்து ஒன்றை எடுத்து பற்ற வைக்க முயல, அந்த நேரம் என்று மலையில் இருந்து கிழே இறங்கி கொண்டு இருந்த வனக்காவலர்கள் கண்ணில் பட , அண்ணனின் கன்னத்தில் பளார் என்று விட்டு அவரிடம் இருந்து பீடிக்கட்டையும் தீப்பெட்டியை பிடுங்கி கொண்டார்கள். பாவம் அவர் அன்றைய இரவை மலை தங்கி கழிக்க திட்டமிட்டு வாங்கி வந்த பீடிக்கட்டை இழந்து விட்டு ரொம்பவே மனுசன் சோகம் ஆயிட்டாப்பல. காட்டிற்குள் பீடி சிகரெட் பிடிக்க கூடாது னு சட்டம் இருப்பதால், சிறு கவனக்குறைவும் பெரும் தீ விபத்திற்கு வித்திடும் என்பதால் இது போல நாம தேவையில்லாத பிரச்சினைகளை தவிர்த்து விடுவது நல்லது. 


எங்கள் பயணத்தை தொடங்கி நடந்து நடந்து பாதைகளும் கடினமாக இருந்து இன்னும் எவ்வளவு தூரம் போகனும் னு யோசிச்சிட்டே நாங்க போய்ட்டு இருந்த அப்போ எங்களின் பாதையில் இரட்டை சுயம்பு லிங்க கோவில், வன தூர்கை அம்மன் கோவில், பலாவடி  கருப்பசுவாமி கோவில் னு பல கோவில்களை கடந்து ஒருவழியா நாங்க மணி 12 மணிக்கு எங்களின் மூன்று மணி நேர பயணித்தில் சுந்தர மகாலிங்க கோவிலை அடைந்தோம். அடர்ந்த காட்டிற்கு நடுவில் அமைந்துள்ள இந்த கோவிலில் பல சிவனடியார்களை எங்களால் காண முடிந்தது. பசி வயிற்றை கிள்ள முதலில் வயிற்றை நிரப்புவோம் அப்படி னு நாங்க அன்னதான கூடத்தை நோக்கி நடந்தோம். விஷேச நாட்களில் மலைமீது பொதுமக்களுக்கு அன்னதானம் அளிப்பார்கள் என்பதை கூட வந்த அண்ணன் சொன்னதை வைத்து தான் நாங்க அங்க போனோம். 12.30 மணி இருக்கும் நாங்க அந்த அன்னதான கூடத்தை சென்று சேர்ந்த போது. அன்றைய தினத்திற்கான மதிய சாப்பாடு அங்கு பரிமாறப்பட்டு கொண்டிருந்தது. நாங்கள் அந்த லைன்ல நின்று எங்களுக்கான தட்டில் சாப்பாடு வாங்கி அங்கேயே உட்கார்ந்து சாப்பிட்டோம். வெயிட் ரைஸ் வித் சாம்பார் அண்ட் பாட்டாணி பொரியல் அன்றைய ஸ்பெஷல். நாங்கள் வயிறார சாப்பிட்டு சிறிது நேரம் ஓய்வு எடுத்தோம். பின்பு சுந்தர மகாலிங்கம் சுவாமி சன்னதிக்கு சென்று வழிப்பாடு செய்து விட்டு அடுத்து சந்தன மகாலிங்கம் சுவாமி சன்னதி க்கும் சென்று வழிப்பாடு செய்து விட்டு மீண்டும் சிறிது நேரம் ஓய்வு எடுத்து விட்டு எப்படி மலையில் இருந்து கீழே இறங்குவது என யோசித்து கொண்டு இருந்தோம். எங்களுடன் வந்த அண்ணன்களிடம் எங்களுக்கான பயண சந்தேகங்கள் அனைத்தும் கேட்டு கொண்டு எங்களின் அடுத்த பயணத்தில் ரிஸ்க் எடுக்க தயார் ஆனோம். என்னுடன் வந்த நண்பன் ஹரிஷிடம் அடுத்த கட்ட பயணம் எப்படி இருக்கும் என்று எதுவும் தெரியாமல், எது வந்தாலும் எதிர் கொள்வோம் ஒன்றாக என்று சொல்லி விட்டு மலை மீது இருந்து கீழே இறங்கும் அந்த ரிஸ்க்கான பயணத்தை தொடங்கினோம். மீண்டும் என்னடா உங்க பயணத்துல ரிஸ்க் இருக்கு? அதான் வந்த வழியே கீழே இறங்க போறீங்க; அதுக்கு எதுக்கு இவ்வளவு பில்டப் னு நீங்க கேட்குறது எனக்கு புரியுது. அங்க தான் ட்விஸ்ட். நாங்க இந்த மலையிலிருந்து கீழே இறங்க முடிவு பண்ணது எல்லாரும் இறங்குற விருதுநகர் மாவட்டத்தில் இருக்கிற தாணிப்பாறை பாதை அல்ல. யாருமே பயன்படுத்தாத மதுரை மாவட்டத்தில சாப்டூர் பக்கம் இருக்க வாாழைத்தோப்பு பாதையை தான் தேர்ந்து எடுத்தோம். 
பிற்பகல் 3 மணி.

முன்பின் தெரியாத அதுவும் விலங்குகள் அச்சம் இருக்குற அடர்ந்த காட்டுக்குள் போற ஒத்தயடி பாதையை நம்பி அது போகும் திசையில் நானும் நண்பன் ஹரிஷும் நடந்து போனோம். நாங்க மலையேறிய தானிப்பாறை பாதை மாறி இது கிடையாது. மேலே நாங்க ஏறும் போது எங்க கூட ஒரு பெருங்கூட்டம் மலையேறியது. ஆனா இறங்கும் போது நாங்க ரெண்டு பேர் மட்டும் தனியா போனோம். குறுகலான ஒத்தயடி பாதையில் இன்னும் எவ்வளவு நேரத்தில் மலையடிவாரத்தை சென்று சேருவோம் னு தெரியாம நடந்து போய்ட்டே இருந்தோம். நண்பன் ஹரிஷ் என்னை வீடியோ எடுத்துட்டே பொறுமையா பின்னாடி நடந்து வந்தான். நாற்பது நிமிட பயணத்துல நாங்க ஒரு சின்ன ஓடையை அடைந்தோம். 
காட்டில் வழி தெரியாத பாதையில் பயணம் செய்த லிங்க் - https://photos.app.goo.gl/eoHkjKocCEhVHUMm9
அங்கு சிறிது நேரம் ஒய்வு எடுத்து கொண்டோம். அந்த அடர்ந்த காட்டில் வழி தவறி போய் விடாமல் என்னை நம்பி வந்த நண்பனை எப்படியாவது சூரியன் மறைவதற்குள் மலை அடிவார கிராமத்திற்கு அழைத்து செல்ல வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் வேகமாக நடந்து சென்றோம். தொலைவில் சமவெளி தெரிந்தால் கூட ஒரு ஆறுதலாக இருக்கும் எங்களுக்கு, ஆனால் ஒரு மணி நேர நடைபயணத்தில் நாங்கள் அந்த காட்டிலேயே தான் நடந்து வந்து கொண்டு இருந்தோம். இதில் மற்றுமொரு விஷயம் நடுவில் அந்த ஒத்தையடி பாதை காணாமல் போய் விட்டது. நாங்களே ஒரு பாதையில் நடந்து சென்று எங்களின் பாதையை தேடி கொண்டே ஒரு மலையின் சரிவான பகுதிக்கு சென்று சேர்ந்தோம். மணி மாலை 4. அப்போது தான் தெரிந்தது நாங்கள் வழி மாறி வந்தது. நாங்கள் ஒரு மலையின் முனையில் நிற்க,  எங்களுக்கு தொலைவில் பக்கத்துல மலையில் நாங்க தவறவிட்ட ஒத்தையடி பாதையை கண்டுபிடித்தோம். இரு மலையையும் பிரிக்கும் பெரிய சரிவான பள்ளமும் , மற்றும் மலைகளுக்கு நடுவில் ஒரு நீர்வீழ்ச்சி என அந்த இடம் அழகும் ஆபத்தும் கலந்து இருந்தது. அடுத்த மலையில் இருக்கும் பாதைக்கு போனால் மட்டுமே சீக்கிரம் மலையை விட்டு சீக்கிரம் கீழே இறங்க முடியும் என்று அந்த ஆபத்தான டாஸ்க்கை நாங்கள் செய்தோம். அந்த சரிவான மலையில் இறங்க தொடங்கினோம். நான் வேகமாக இறங்குவதை பார்த்த ஹரிஷ் சொன்னான். அண்ணா! பொறுமையா இறங்குங்க. ஒரு வேளை எனக்கு எதாவது ஆச்சுனா இங்கயே என்னோட உயிர் போய்டனும். கை கால் உடைஞ்சு வீட்ல கஷ்டத்த தர கூடாது னு அவன் சொன்ன வார்த்தைகள் அவனின் அந்த பயத்தை எனக்கு உணர்த்தியது. எப்படியோ நாங்கள் பொறுமையாக ஒரு மலையில் இருந்து சரிவான பாதையில் இருந்து இறங்கினோம்.

அந்த சரிவான பாதை விடியோ லிங்க் - https://photos.app.goo.gl/PwFJrNxwsiroAyiU9 
அங்கே அந்த நீர்வீழ்ச்சியின் அழகை ரசித்து விட்டு அதன் அருகே இருந்த ஒரு குகையை பார்த்து விட்டு மீண்டும் அடுத்த மலையின் சரிவான செங்குத்தான பாதையில் ஏறி நாங்கள் தவறவிட்ட பாதையை அடைந்தோம். சிறிது நேரம் அந்த பாதையில் நடந்து சென்ற போது தான் கொஞ்சம் ஆறுதல் அளித்த காட்சியை கண்டோம். தொலைவில் சமவெளி பகுதியில் பரந்து விரிந்து இருந்த கிராமங்களை அந்த மலையின் உச்சியில் இருந்து பார்த்த உடனே சீக்கிரம் இருட்டுவற்குள் நாங்கள் மலையடிவாரம் சென்று சேர வேண்டும் என எங்களின் நடையின் வேகத்தை கூட்டினோம். 

மலை மீது சரிவான பாதையில் ஏறும் வீடியோ லிங்க் - https://photos.app.goo.gl/mHmvhK7mSnAasdpB8

ஆபத்து நிறைந்த சரிவான பாதையில் பயணம் செய்த வீடியோ லிங்க் - https://photos.app.goo.gl/TaVz3ozYgQjUvxFJA


எங்களுக்கு மற்றுமொரு மிகப்பெரும் சாவல் அந்த பாதையில் உள்ள பாறைகளில் நாங்கள் கால் வைத்து இறங்கும் போது தீடீர் என அது உருண்டு கீழே சென்றது . வேகமாக இறங்க வேண்டும் என நாங்கள் நினைத்தது இதனால் எங்களை பொறுமையாக இறங்க வைத்தது. குடிக்க வைத்து இருந்த தண்ணீர் தீர்ந்து போக , பாதையில் எந்த பாறை எப்போ உருளுமோ என்று தெரியாமல், இதற்கு நடுவில் சூரியன் வெளிச்சம் குறைய எங்கள் பயணம் இன்னும் கடினமாக மாறியது. அப்போது தான் எங்கள் பாதையில் மலையடிவார கிராமத்தில் இருக்கும் ஒரு குடும்பம் இரவு மலையில் தங்கி தரிசனம் செய்ய மலையேறி கொண்டு இருந்தார்கள். அவர்களிடம் இன்னும் எவ்வளவு தூரம் என கேட்க அவர்கள் இன்னும் சிறிது தொலைவு தான் என சொன்னது கொஞ்சம் ஆறுதலான விஷயம். நாங்கள் தொடர்ந்து கீழே இறங்கி , பல இடங்களில் ஓய்வு எடுத்து கொண்டு மாலை 5.30 மணி அளவில் எங்க பாதையில் மற்றுமொரு நீர்வீழ்ச்சியை கண்டோம். முதல் வேளையாக தாகம் தீரும் அளவு நீர்வீழ்ச்சி தண்ணீயை குடித்து விட்டு எங்களின் உடல் அசதியை போக்க அந்த மூலிகை வனத்தின் ஊடே மலையில் இருந்து கீழே வரும் நீர்வீழ்ச்சியில் குளிக்க முடிவு செய்தோம். பத்து நிமிடங்களுக்கு மேல் நாங்கள் அருவியில் ஆனந்த குளியல் போட்டு விட்டு அந்த மலையடிவார கிராமம் நோக்கி பயணத்தை தொடர்ந்தோம். 

அருவியில் ஆனந்த குளியல் வீடியோ லிங்க் - https://photos.app.goo.gl/NwsK2BYXSUD4VA8V7

சூரியன் முற்றிலுமாக மறைந்து இருள் சூழ தொடங்கிய வேளையில் நாங்கள் மதுரை மாவட்டம் சாப்டூர் அருகே உள்ள வாழைத்தோப்பு என்னும் குக்கிராமத்தை அடைந்தோம். மணி மாலை 6.30. 

நாங்கள் வாழைத்தோப்பு கிராமத்திற்கு சென்று சேர்ந்த போது அந்த ஊரே அனைத்து வேளைகளையும் முடித்து கொண்டு அதற்குள் அமைதியாக காட்சி தந்தது. அந்த குக்கிராமத்தில் இருந்து எப்படி மதுரை செல்வது என தெரியாமல் அங்கு இருந்த சில கிராமவாசிகளிடம் கேட்ட போது அவர்கள் சொன்னார்கள், "பஸ்ல இல்லப்பா! இப்போ ஒரு பால் வண்டி வரும் பேரையூர் வரைக்கு போகும். அதுல ஏறி நீங்க பேரையூர் போய்ட்டு அங்க இருந்து மதுரைக்கு பஸ்ல போய்டலாம்" னு சொன்னதை கேட்டு அந்த பால் வண்டிக்காக காத்து இருந்தோம். சிறிது நேரத்தில் வந்த பால் வண்டியில் அந்த ஐடியா கொடுத்த ஊர்க்காரங்களே பால் வண்டி டிரைவர் கிட்ட பேசி எங்களை அந்த வண்டியில் ஏற்றி விட்டார்கள். அவர்களுக்கு நன்றி சொல்லி விட்டு அந்த பால் வண்டியில் மதுரை நோக்கி எங்கள் பயணம் தொடர்ந்தது.

இந்த திடீர் பயணத்தை பல திரில்லிங்கான அனுபவத்தோட நான் ஆசைப்பட்ட மாறியே திடீர் திடீரென மாறிய திட்டங்களுடன் வெற்றிகரமாக நான் கம்ப்ளீட்டு பண்ணதுக்கு முக்கிய காரணம் என் கல்லூரி ஜூனியர் நட்பு ஹரீஷ் தான். ஒரு பயணத்துல நம்ம கூட வரவங்க நம்ம மைன்ட் செட்க்கு ஏற்றார் போல அமைவதும், நாம போடுற எல்லா திட்டங்களுக்கும் ஒத்துழைப்பு கொடுக்கறதும் தான் நம்ம பயணத்தை மகிழ்ச்சியான ஒன்றாகவும் சிறந்த ஒன்றாக மாற்றும். நண்பன் ஹரீஷ் நான் போன பயணங்களில் உடன் வந்த நண்பர்களில் ஒரு சிறந்த சக பயணி. மேலும் பல பயணங்கள் அவனுடன் போகணும் னு ஆசை இருக்கு, ஆனா அதுக்கு காலம் தான் பதில் சொல்லனும். நாங்க இந்த பயணத்தில் மதுரையை அடைந்து பின்பு மற்றுமொரு திடீர் பயணமாக குலசேகரப்பட்டினம் தசராவிற்கு தம்பி சரவணா என்கிற பிரவோ வின் அழைப்பை ஏற்று சென்று அப்புறம் சிஏ டெஸ்ட் எழுத குமரியில் இருந்து சென்னைக்கு ரயில் ஏறி மீண்டும் மற்றுமொரு திடீர் ப்ளானாக சிஏ டெஸ்ட்டை எல்லாம் தள்ளி வெச்சிட்டு கொல்லிமலைக்கு போனோம். இந்த அனுபவங்களை வாய்ப்பிருந்தால் அடுத்த அடுத்த பயணக்கட்டுரைகளில் பார்ப்போம் நண்பர்களே! 


ஆகபெரும் அதிசயம் அருவி

“Waterfalls are exciting because they have power, they have rainbows, they have songs, and they have boldness and craziness!” - Unknown ...