இது ஒரு அன்ரிசர்வ்டு பயணியின் கதை.
இந்த கொரோனா பெரும் தொற்று காலத்திலும், நான் தவறாமல் சில பயணங்களை போய்ட்டு தான் வந்தேன். அப்போ எல்லாம் நான் ரொம்ப மிஸ் பண்ண விஷயம் என்ன தெரியுமா? அது ! நான் திடீர் என்று கிளம்பி போகும் அன்ரிசர்வ்டு கோச் ரயில் பயணத்தை தான். நான் இந்த மாறி பயணம் போன கதையை பலரிடம் சொல்லும் போது தான் எனக்கு தெரியும், என்னை போல ரயிலில் அன்ரிசர்வ்டு பெட்டியில பயணமே போனது இல்லை பலர். ஆனா நான் போன பெரும்பாலான பயணங்களுமே அன்ரிசர்வ்டு கோச்ல தான் , இந்த கொரோனா பெரும் தொற்று காலத்துக்கு முன்னாடி வரைக்கும். அதனால தான் என் பெயர் அன்ரிசர்வ்டு பயணி.
நான் போன முதல் ரயில் பயணம் எப்போ னு யோசிச்சி பார்க்கும் போது, என் நினைவுக்கு தெரிந்து அது என்னுடைய அப்பா பிறந்து வளர்ந்த ஊரான திண்டிவனத்திற்கு குடும்பமாக பொங்கல் பண்டிகையை கொண்டாட நாங்க போன அன்ரிசர்வ்டு கோச் பயணம். நான் எம்சிசி கல்லூரியில் சேரும் முன் நான் போன ஒரே ரயில் பயணம் இந்த தாம்பரம் - திண்டிவனம் ரயில் பயணம் மட்டும் தான். ஏன் நான் என் எம்சிசி கல்லூரியில் சேருவதற்கு முன் வரை னு இங்க சொல்றேனா, அதுக்கு காரணம் என் நெடும் பயணங்கள் எல்லாமே நான் சென்னைக் கிறித்தவக் கல்லூரியில் படிக்க சேர்ந்த பின் தான் தொடங்கியது.
கல்லூரி நண்பர்கள் உடன் நான் போன முதல் பயணம் என் கல்லூரி நட்பான கேரளத்தில் இருந்து சென்னை வந்து படித்த அகில் இம்மானுவேல் வீட்டிற்கு, என் கல்லூரி வகுப்பு தோழர்கள் ஆஷிஷ் டேனியல், சாமுவேல் லிவிங்ஸ்டன் மற்றும் பில் கிளின்டன் உடன் திருவல்லா என்னும் நகரத்திற்கு சென்று அங்கு இருந்து அருகில் இருக்கும் புல்லாடு என்னும் கிராமத்திற்கு சென்ற அன்ரிசர்வ்டு கோச் பயணம் தான். அன்று எனக்கு பிடித்து போன இந்த பயணம் இன்று வரை தொடர்கிறது. ஏன் எனக்கு அன்ரிசர்வ்டு பயணங்கள் பெரிதும் பிடித்து போனது என்றால், அதில் எனக்கு இருக்கும் சௌகரியங்கள் தான் காரணம். ஆனால் அந்த காரணங்கள் மற்றவர்களுக்கு பொருந்துமா என்றால் கண்டிப்பாக எனக்கு தெரியாது. தீடீர் யோசனையில் நான் கிளம்பி போன பயணங்கள் எல்லாமே அன்ரிசர்வ்டு கோச் பயணங்கள் தான். ஏற்கனவே திட்டமிட்டு புக் செய்து பயணம் செல்வதில் எல்லாம் எனக்கு விருப்பமே இல்லை. ஆனால் பின்னொரு சந்தர்ப்பத்தில் முன்பதிவு செய்து நான் ரயில் பயணம் செய்த போது தான் தெரிந்தது, அன்ரிசர்வ்டு பயணம் எனக்கு தந்த ஆனந்தத்தை, புதிய உறவுகளை, நினைவுகளை இந்த முன்பதிவு செய்து பயணம் செய்த பயணங்கள் பாதி கூட தரவில்லை. நடுராத்திரி ஆனாலும் விளக்கு அணைக்காமல் யார் என்று தெரியாத மனிதர்கள் உடன், கதை பேசிக் கொண்டே நமக்கு தோணும் போது தூங்கி பயணப்பட்ட அன்ரிசர்வ்டு பயணங்கள் எங்கே? இரவு 10.30 மணி ஆனால் விளக்கை அணைக்க சொல்லி தூங்க சொன்ன ரிசர்வ்டு கோச் பயணங்கள் எங்கே? பெரும்பாலும் ரிசர்வ்டு கோச்சில் பயணம் செய்பவர்கள் அதிகம் யாருடனும் பேசாமல் தூங்கி விடுவார்கள். ஆனால் அன்ரிசர்வ்டு பயணங்களில் ஒரு சிலரை தவிர பலரிடம் பேசிக்கொண்டே எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பயணம் செல்லலாம். தாம்பரத்தில் ஒரு அன்ரிசர்வ்டு கோச் டிராவலுக்கு ஒரு டிக்கெட் எடுத்தால் நினைத்த ஸ்டேஷனில் இறங்கி நினைத்த நேரத்தில் வெவ்வேறு ரயிலில் ஏறி பயணம் செய்த பயணங்களை மீண்டும் செல்ல வேண்டும் என மனதில் ஒரு ஆசை.
அன்ரிசர்வ்டு பயணங்களில் நமக்கான இருக்கையை எவ்வளவு கூட்டம் இருந்தாலும் சாமர்த்தியமாக யாரிடமாவது பேசிப் பேசியே வாங்கி விடுவேன். அது ஒரு கலை என்றே சொல்லலாம். பலரிடம் சண்டை செய்து எல்லாம் வாங்கி இருக்கிறோம். நான்கு பேர் அமரும் இருக்கையில் ஐந்து அல்லது ஆறு பேர் அமர்ந்தும், லக்கேஜ் வைக்க இருக்கும் மேல் சீட்டில் படுத்து இருக்கும் நபரின் தூக்கத்தை தட்டி எழுப்பி நாம் அந்த சீட்டை உட்கார பயன்படுத்துவது, கால் வலி எடுத்தால் அப்படியே கீழே இருக்கும் இடத்தில் உட்கார்ந்து பயணிப்பது, தூக்கம் வந்தால் அப்படியே கீழே சீட்டுக்கடியில் படுப்பது என அன்ரிசர்வ்டு பயணங்களில் என்றுமே எனக்கான சௌகரியத்தை ஏற்படுத்தி கொண்டு தான் நான் தனியாகவும், என் நண்பர்களுடன் பயணித்து இருக்கிறேன். இந்த அன்ரிசர்வ்டு பயணங்கள் எனக்கு கொடுத்த நினைவுகள் ஏராளம். அதில் சிலவற்றை என்னால் எப்பொழுதுமே மறக்க முடியாத நினைவுகள்.
வால்பாறை மலைக்கு செல்ல நான் தனியே சென்னையில் இருந்து கோவைக்கு அன்ரிசர்வ்டு கோச் சில் பயணம் செய்த போது, என்னுடன் கதைகள் பல பேசிக் கொண்டே பல பயண டிப்ஸ் கொடுத்த கோவை ஜெயசுந்தரம் அண்ணா வை எப்படி மறக்க முடியும்? நள்ளிரவில் திருச்சியில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் ரயிலில் அன்ரிசர்வ்டு கோச் சில் ஏறிய நான், தூக்க கலக்கத்தில் ரயிலின் வாயிலிலேயே படுத்து உறங்கி காலையில் தூங்கி எழுந்த போது, என் அருகில் அமர்ந்து இருந்த 1964 ஆண்டு ராமேஸ்வரம் தனுஷ்கோடியை தாக்கிய புயலில் உயிர் தப்பிய மண்டபம் சந்திரன் தாத்தா வை எப்படி மறக்க முடியும்? தாம்பரத்தில் இருந்து திருச்சி வரை உட்கார கூட இடம் இல்லாமல் நின்று கொண்டே செங்கோட்டை எக்ஸ்பிரஸ் அன்ரிசர்வ்டு கோச் சில் பயணம் செய்த ஒரு குடும்பத்தில், என்னுடன் நின்று கொண்டே பயணித்தும் உரையாடியும் வந்து, நான் ரயிலை விட்டு இறங்கும் போது உன் எதிர்கால பார்ட்னர் ரொம்பவும் கொடுத்து வச்சவ ! என்று அந்த அக்கா எதற்கு சொன்னார்கள் என்றே தெரியாமல் நான் இறங்கி போனேனே, அந்த பெயர் தெரியாத தென்காசிக்கு போன அம்மு அக்காவை எப்படி மறக்க முடியும்? பஞ்சாப்பில் இருந்து சத்தீஸ்கர் செல்லும் ரயிலின் அன்ரிசைர்வ்டு கோச் சில் லக்கேஜ் வைக்கும் இடத்தில் ஏறி அமர்ந்து, டெல்லியில் இருந்து ஆக்ரா சென்ற போது என்னுடன் பயணித்த அவர்கள் பேசிய ஹிந்தி புரியாமல் கூகுள் டிரன்ஸ்லேடர் உதவியுடன் நான் அவர்களுடன் ஆங்கிலம் டூ ஹிந்தி டிரன்ஸ்லேஷனில் மொபைல் வழியே உரையாடி சென்ற தர்மேந்திர மற்றும் கோமல் சகோதர்களை எப்படி மறக்க முடியும்? கோவையில் இருந்து என் நண்பர்களுடன் நான் நாகர்கோவில் க்கு அன்ரிசர்வ்டு கோச் சில் பயணம் செய்த போது, ஈரோட்டில் இருந்து அம்பாசமுத்திரத்திற்கு ஒரு கல்யாணத்திற்கு சென்ற திருமணமான அக்கா தங்கை மற்றும் அவர்களின் இரு மகள்கள் என எங்களுடன் இரவு முழுவதும் உறங்காமல் தம் ஷரத்ஸ் விளையாடியும் பல கதைகள் பேசியும் வந்த பெயர் தெரியாத அந்த குடும்பத்தை எப்படி மறக்க முடியும்? சேலத்தில் இருந்து சென்னை செல்லும் ரயிலில் அன்ரிசைர்வ்டு கோச் சில் இடம் பிடிக்க ப்ளாட்பாரத்திற்கு அப்பொழுது தான் வந்த ரயிலின் கதவுகள் திறக்கப்படாத காரணத்தினால், திறந்து இருந்த எமர்ஜென்சி எக்ஸிட் வழியே உள்ளே பாய்ந்து இடம் பிடித்த நினைவை எப்படி மறக்க முடியும்? கையில் காசு இல்லாமல் கேரளாவின் சாலக்குடியில் இருந்து சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் அன்ரிசர்வ்டு கோச் சில், நான் முதன் முறையாக வித் அவுட் டிக்கெட்டில் பயணம் செய்த பயணத்தை எப்படி மறக்க முடியும்? ராமேஸ்வரத்தில் இருந்து கன்னியாகுமரி செல்லும் ரயிலின் அன்ரிசர்வ்டு கோச் சில் ஏறி தூக்க கலக்கத்தில் நன்றாக உறங்கி விட கன்னியாகுமரி சென்ற ரயிலில் இருந்து அனைவரும் இறங்கி விட நான் மட்டும் அன்ரிசர்வ்டு கோச் சில் நல்ல தூக்கத்தில் இருக்க , என்னை எழுப்ப போலீஸ் லத்தியில் காலையிலேயே அடி வாங்கி நான் எழுந்த காலை பொழுதை எப்படி மறக்க முடியும்? வர்கலாவில் இருந்து திருவனந்தபுரம் செல்ல அன்ரிசர்வ்டு டிக்கெட் எடுக்க கவுன்டருக்கு சென்ற போது டிக்கெட் தரும் அக்கா நாங்கள் பேசிய தமிழை பார்த்து, எங்களுடன் தமிழில் பேசி , என்னடா ஊர் ஊரா சுத்துறீங்களா? பார்த்து பத்திரமா வீடு போய் சேருங்க அப்படி னு எங்கள் அக்கறைப்பட்ட அம்பத்தூர் சேர்ந்த அக்கா வை எப்படி மறக்க முடியும்? நடுங்கும் குளிரில் நான் பஞ்சாப் நோக்கி பயணப்பட டெல்லி ரயில் நிலையத்தில் அன்ரிசர்வ்டு டிக்கெட் எடுத்து காத்து இருந்த போது, என்னை போலவே ஹிந்தி மொழி தெரியாமல் கோவா விற்கு எப்படி செல்வது என தெரியாமல், தனியே தவித்து கொண்டிருந்த பிரேசில் நாட்டை சார்ந்த சூ என்னும் சூலேன் காப்புரிசே என்னும் வெளிநாட்டு பெண்ணுடன் எனக்கு ஏற்பட்ட நட்பை எப்படி மறக்க முடியும்?மேட்டுபாளையத்தில் இருந்து ஊட்டிக்கு மலை ரயிலில் அன்ரிசர்வ்டு பெட்டியில் நண்பர்கள் நித்தீஷ், நாகராஜா, சபரி உடன் சென்ற பயணத்தை எப்படி மறக்க முடியும்? கல்கா வில் இருந்து சிம்லா விற்கு ஹிமால்யன் மலை ரயிலில் அன்ரிசர்வ்டு கோச் சில் இடம் கிடைக்காமல் படியில் அமர்ந்து பின்பு சரக்கு பொருட்கள் ஏற்றி செல்லும் பெட்டியில் நின்று கொண்டு சென்ற மலை ரயில் பயணத்தை எப்படி மறக்க முடியும்? தனியே நான் போன ரயில் பயண இப்படி அன்ரிசர்வ்டு கோச் ரயில் பயணங்கள் எனக்கு அறிமுகப்படுத்திய மனிதர்கள், கொடுத்த மறக்க முடியாத நினைவுகள் எல்லாம் என்றுமே என்னால் மறக்கவே முடியாத விஷயங்கள்.
அன்ரிசர்வ்டு கோச் ரயில் பயணம் சென்றவர்கள் பெரும்பாலும் சிரமங்களை பல கடந்தே தாங்கள் செல்லும் ஊருக்கு சென்று சேருவார்கள். ஏனெனில் அந்த பயணங்காள் அவ்வளவு கடினமான அனுபவத்தை கொடுக்கும், குறிப்பாக பெண்களுக்கு. ஆனால் எனக்கும் பல நேரத்தில் கஷ்டமாக இருந்த இந்த பயணங்கள் , அதே வேளையில் அந்த பயணம் தந்த ஒருவித குதுகலத்தில் நான் பெரும்பாலும் அன்ரிசர்வ்டு கோச் ரயில் பயணங்களையே தொடர்ந்து மேற்கொண்டு இருக்கிறேன். இனியும் அவ்வாறே என் பயணங்கள் தொடரும். நீங்களும் வாய்ப்பு இருந்தால் ஒரு அன்ரிசர்வ்டு கோச் ரயில் பயணம் ஒன்னு இந்த கொரோனா பெரும் தொற்று பாதிப்பின் தாக்கம் முடிந்த உடன் போய் வாருங்கள்.
- பயணங்கள் தொடரும்!