Saturday, 5 June 2021

ஆகபெரும் அதிசயம் அருவி

“Waterfalls are exciting because they have power, they have rainbows, they have songs, and they have boldness and craziness!” - Unknown

அருவி ஒர் அதிசயம் ! அருவி ஒர் ஆச்சரியம் !! உன்னை நீ யார் என்று அறிந்து கொள்ள ஒரு அருவியின் அருகில் அமர்ந்து அதன் ஓசையை கேட்க வேண்டும் என எங்கோ படித்த நினைவு. எவ்வளவு உயரத்தில் இருந்து அருவி கீழ் நோக்கி விழுந்தாலும், அது மீண்டும் தன் பயணத்தை நிறுத்தாமல் தனக்கான பாதையை உருவாக்கி கொண்டு முன்னோக்கி செல்லும். அது தான் அந்த அருவி நமக்கு கற்றுக் கொடுக்கும் வாழ்க்கைக்கான பாடம். அருவியை பார்த்தால் எத்தனை வயது கொண்ட மனிதனும் குழந்தையை மாறி விடுவான். அப்படி நான் போன பயணங்களில் நான் பார்த்த அருவிகள் குறித்தே நான் இங்கே கூற போகிறேன்.

திரைப்படங்களிலும், புகைப்படங்களிலும் மட்டுமே நான் பார்த்த அருவியை முதன் முதலில் எங்கு பார்த்தேன்? என யோசித்து பார்க்கிறேன். என் கல்லூரியின் இரண்டாம் ஆண்டு செமஸ்டர் விடுமுறையை நண்பர்களுடன் கொண்டாட நான் கேரளாவில் உள்ள நண்பன் வீட்டிற்கு சென்றேன். நாங்கள் நண்பனின் வீட்டிற்கு சென்ற அன்று, நண்பன் அகில் தன் தந்தையிடம் எங்களை ஊர் சுற்றி காட்ட அழைத்து செல்வதாக பொய் சொல்லி விட்டு காரில் ஒரு மறைவான மலைப்பகுதியில் இருக்கும் ஒரு அருவிக்கு அழைத்து சென்றான். அந்த அருவியின் பெயர் அருவிக்குழி. கேரளாவில் உள்ள திருவல்லா நகருக்கு அருகில் உள்ள புல்லாடு கிராமத்தில் இருந்து சில கிமீ தொலைவில் ஒரு மலையில் இருக்கும் அருவி. நாங்கள் போன சமயத்தில் யாருமே அருவியில் இல்லை. நானும் என் நான்கு நண்பர்கள் மட்டுமே ஒரு மணி நேரத்திற்கும் மேல், அந்த அருவியில் ஒரு ஆனந்த குளியல் போட்டோம். என் வாழ்க்கையில் முதன்முறையாக அருவியை பார்த்த சந்தோஷத்தில், அந்த நாள் ஒரு சிறந்த நாளாக அமைந்தது. பின்னொரு சந்தர்ப்பத்தில் நான் மீண்டும் அதே அருவிக்கு நண்பர்களுடன், சில ஆண்டுகளுக்கு பிறகு சென்று வந்து இருக்கிறேன். 

செப்டம்பர் 2016. நானும் என் கல்லூரி நண்பர்களும் சேலம் மாவட்டம் ஏற்காட்டிற்கு ஒரு பயணம் சென்று இருந்தோம். அப்பொழுது ஏற்காட்டில் ஒரு அருவி இருப்பதாக கேள்விப்பட்டு, அதை பார்த்தே ஆக வேண்டும் என அந்த அருவிக்கு செல்லும் பாதையில் நாங்கள் காரில் சென்றோம். காரை ஒரு இடத்தில் பார்க் செய்து விட்டு சரிவான பாதையில் ஒரு கிமீ தூரத்தை நடந்தே, பல நூறு படிக்கட்டுகளை கடந்து சென்றால் பல நூறு அடி தூரத்தில் இருந்து விழும் அருவியை கண்டோம். ஆனால் ஏனோ எனக்கு அங்கு குளிக்கவே பிடிக்கவில்லை. வெறும் அந்த அருவியில் இருந்து கொட்டும் தண்ணீரின் அழகை மட்டும் ரசித்து விட்டு திரும்பி வந்து விட்டேன். அதன் பிறகு நான் ஏற்காடு செல்லும் போதெல்லாம் கிள்ளியூர் அருவிக்கு மறக்காமல் விசிட் செய்வேன். ஆனால் அங்கு குளித்து மகிழ மட்டும் இதுவரை தோன்றியதே இல்லை. அதற்கான காரணம் மட்டும் இதுவரை எதற்கு? ஏன்? என்று புரியாமலே, ஒவ்வொரு முறை ஏற்காடு மலையில் இருந்து இறங்கி வந்து விடுகிறேன்.

தமிழகத்தில் அருவிகள் என்றாலே அது குற்றாலம் தான் பேமஸ். ஜூன் முதல் ஆகஸ்டு வரை குற்றாலத்தில் சீசன் களை கட்டும். அப்படி ஒரு சீசன் காலத்தில் தான் நான் முதன் முதலாக குற்றாலத்திற்கு சென்றேன். என் கல்லூரி நட்பு நஷீரா வின் திருமணத்திற்காக நாங்கள் தென்காசி க்கு சென்று இருந்தோம். அப்போது நாங்கள் செங்கோட்டையில் உள்ள நஷீரா வின் பாட்டி வீட்டில் தங்கி இருந்தோம். நானும் நண்பன் செந்தில்குமாரும் இரவு உணவு வாங்க ராயல் என்ஃபீல்டு பைக் எடுத்து கொண்டு பார்டர் கடை பரோட்டா வாங்க சென்றோம். தீடீர் யோசனையாக நானும் அவனும் பைக்கை முறுக்கி கொண்டு, குற்றாலம் ஆறு கிமீ என்னும் பெயர் பலகை தந்த ஆர்வத்தில், குற்றாலம் நோக்கி பயணப்பட்டோம். சீக்கிரம் ஒரு குளியல் போட்டு விட்டு திரும்பி விட வேண்டும் என திட்டம். மெயின் அருவியில் நாங்கள் போன நேரத்தில் கூட்டமும் இல்லாத காரணத்தால் சீக்கிரம் குளித்து விட்டு செங்கோட்டையில் நாங்கள் தங்கி இருந்த வீட்டிற்கு திரும்பினோம். ஆனால் அருவியில் குளிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில், பாக்கெட்டில் இருந்த மொபைலை பிளாஸ்டிக் கவரில் ஒழுங்காக சுற்றி வைக்காமல், அப்படியே குளிக்க சென்றதால் மொபைலும் என்னுடன் சேர்ந்து குற்றால அருவியில் குளித்து விட்டது. நாங்கள் அருவிக்கு சென்று வந்த கதை தெரிந்து நண்பர்கள் கடுப்பு ஆனது எல்லாம் தனிக் கதை. பின்னொரு சந்தர்ப்பத்தில் நானும் என் கல்லூரி ஜூனியர் பிரதீப்பும், குற்றாலத்தில் உள்ள பிரதீப்பின் வகுப்பு தோழியும், என் ஜூனியருமான ஷீலா வீட்டிற்கு சென்ற போது நான் மீண்டும் குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, பழைய அருவி, புலி அருவி, ஐந்தருவி என பல அருவிகளுக்கு சென்று குளித்து மகிழ்ந்தோம். அண்மையில் என் வாட்ஸ்சப் நட்பு கௌஷல்யா உடன் குற்றாலம் சென்று இருந்த போது ஆர்ப்பரித்து கொட்டிய அருவியில் கொரோனா பரவல் காரணமாக குளிக்க தடை என்ற அறிவிப்பால் அருவியில் குளிக்காமலே ஏமாற்றத்துடன் திரும்பி வந்தோம். என்றுமே குற்றாலம் தரும் குதுகாலம் தனி அழகு. பலருக்கு அருவி குளியல் என்றாலே குற்றாலம் தான் நினைவுக்கு வரும். எத்தனை முறை குளித்தாலும் சலிக்கவே சலிக்காத  அருவிகள் நிறைந்த ஊர் குற்றாலம்.


ஒரு அருவியை காண பல கிமீ நடந்து, பின்பு அருவிக்கு செல்லும் நேரம் முடிந்து விட போகிறது என பல கிமீ ஒடி போன நினைவு உங்களுக்கு உண்டா? எனக்கு உண்டு. கேரள மாநிலம் திருவனந்தபுரத்திற்கு அருகில் உள்ளது பொன்முடி மலை. நான் நண்பர்களுடன் பொன்முடி மலைக்கு சென்று இருந்த போது, திரும்பி செல்ல இருந்த பேருந்தை மிஸ் செய்து விட்டோம். மலையின் அடிவாரத்தில் இருக்கும் அருவிக்கு சென்றே தீர வேண்டும் என மனதில் ஒரு எண்ணம். ஆனால் அங்கு செல்ல அந்த நேரத்தில் பேருந்தே இல்லை. அடுத்த பேருந்தில் சென்றால் அதற்குள் அருவிக்கான பார்வையாளர்கள் நேரம் முடிந்து அருவிக்கான என்ட்ரி க்ளோஸ். பல கிமீ நடந்தே வந்து, பலரிடம் லிப்ட் கேட்டு யாருமே உதவ முன்வராமல் எப்படியோ நான் நண்பர்களுடன் மலையடிவாரத்திற்கு வந்து சேர்ந்தேன். அருவிக்கு செல்ல டிக்கெட் கவுன்டரில் டிக்கெட் எடுத்து ஒரு கிமீ தொலைவில் இருக்கும் அருவியை காண நான் மட்டும் தனியே ஓடி போகிறேன். எப்படியோ அந்த அடர்ந்த காட்டிற்குள் தனியே ஆர்ப்பரித்து கொட்டும் அருவியை கண்ட போது, மனதில் ஏற்பட்ட சந்தோஷத்தை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. அது தான் நமக்கு அருவி தரும் ஆனந்தம். அந்த அருவியின் பெயர் பொன்முடி மலையடிவாரத்தில் உள்ள மீன்முட்டி அருவி. 

இதுவரை நான் பார்த்த அருவிகளிலேயே எது சிறந்த அனுபவம் என்று என்னை கேட்டால், நான் சற்றும் யோசிக்காமல் கொல்லிமலையில் உள்ள ஆகாயகங்கை அருவிக்கு நான் முதன்முதலில் சென்ற அனுபவத்தையே செல்லுவேன். அதற்கான காரணம் நான் அந்த அருவிக்கு போன நேரத்தில் அது ஆர்ப்பரித்து கொட்டிய அந்த காட்சி, இன்றுவரை என் கண்ணில் அப்படி நீங்காமல் நிறைந்து இருக்கிறது. நானும் நண்பன் ஹரிஷும் சதுரகிரி, குலசை தசரா வுக்கு சென்று விட்டு சென்னை திரும்பும் வேளையில் திடீர் பயணமாக கொல்லிமலை க்கு செல்லலாம் என திட்டமிட்டோம். நாங்கள் சென்ற சென்னை ரயிலில் இருந்து மதுரையில் இறங்கி, அங்கு இருந்து பெங்களூர் செல்லும் ரயிலில் நானும் அவனும் நாமக்கல் நோக்கி சென்றோம். தூக்க கலக்கத்தில் நாமக்கலில் இறங்காமல் அடுத்த ரயில் நிலையமான ராசிப்புரத்தில் சென்று இறங்கினோம். ராசிப்புரம் பேருந்து நிலையம் சென்று அங்கு இருந்து கொல்லிமலையில் உள்ள அறப்பளீஸ்வரர் கோவிலுக்கு நேரடியாக செல்லும் பேருந்து இருப்பதாக கேள்விப்பட்டு, அந்த பேருந்து வரும் வரை அந்த அதிகாலை வேளையில் காத்திருந்து பேருந்தில் ஏறி கொல்லிமலை பயணத்தை தொடர்ந்தோம். காரணம் அந்த கோவிலின் எதிரில் தான் ஆகாயகங்கை அருவிக்கு செல்லும் பாதையின் என்ட்ரி பாயிண்ட் உள்ளது. நாங்கள் அந்த கோயிலின் வாசலில் பேருந்தில் இருந்து இறங்கி ஆகாயகங்கை அருவிக்கு செல்லும் மலைப்பாதையில் உள்ள டிக்கெட் கவுன்டரில் டிக்கெட் எடுத்து விட்டு நானும் ஹரிஷும் மலையில் இருந்து இறங்க தொடங்கினோம். நேர்த்தியாக கட்டப்பட்ட படிக்கட்டுகள் என்றாலும் சரிவான பாதை நமக்கு ஒருவித சோர்வை தந்தது. சிறிது தூரம் உட்கார்ந்து ஓய்வு எடுத்து விட்டு பின்பு பயணத்தை தொடர்ந்தோம். அரை மணி நேரத்திற்கும் அதிகமான பயணத்தில் நாங்கள் அருவியை அடைந்தோம். ஏன் ! இந்த அருவி விசிட் எனக்கு ஆல்டைம் ஸ்பெஷல் என்றால் நாங்கள் சென்ற நேரத்தில் அந்த அருவி இருக்கும் மலைப் பகுதியில் பெய்த மழையால் அருவியில் நீர் ஆக்ரோஷமாக ஆர்ப்பரித்து கொட்டியது. அருவியின் சாரலில் நாங்கள் முழுவதுமாக நனைந்து விட, அருவியின் அருகில் செல்ல அனைவரும் பயந்த நொடியில், நான் அருவியின் மிக அருகில் சென்று பல நூறு அடி உயரத்தில் இருந்து கொட்டும், பால் அருவி போன்ற அருவியின் ஆக்ரோஷத்தை அருகில் இருந்து ரசித்தும் , அருவியின் முன் உரக்க கத்தியும் மகிழ்ந்தேன். நாங்கள் தான் அன்றைய நாளில் அருவிக்கு கடைசியாக சென்றவர்கள். அதன் பிறகு நீரின் வேகம் அதிகரித்த காரணத்தினால் வனத்துறையால் அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. நாங்கள் மட்டும் அருவி ஆர்ப்பரித்து கொட்டும் அழகை அரை மணி நேரத்திற்கும் மேல் அங்கு இருந்து ரசித்து விட்டு , அதன் சாரலிலேயே முழுவதுமாக நனைந்து, மீண்டும் மலை ஏறி ஆகாயகங்கை அருவியில் இருந்து விடைபெற்று சென்றோம். அருவியின் முன் நின்று நாம் மனதில் நினைத்து வேண்டி கொள்ளும் காரியம் நிறைவேறும் என்ற நம்பிக்கையும் உண்டு என அங்கு இருந்த சிலர் கூறினார்கள். அண்மையில் பெரம்பலூரில் இருந்து நண்பன் நிவாஸ் உடன் கொல்லிமலைக்கு பைக்கில் நாங்கள் சென்ற போது ஆகாயகங்கை அருவிக்கு செல்ல கொரோனா பரவல் காரணமாக அனுமதி இல்லை என்று கூறியதால் அருகில் இருந்த ஆற்றில் சிறு சிறு அருவி போல ஆர்ப்பரித்து கொட்டிய நீரில் குளித்து மகிழ்ந்தோம். கொல்லிமலையில் உள்ள ஆகாயகங்கை அருவி அனைவரும் அவசியம் பார்த்து ரசிக்க வேண்டிய அருவி. 


கேரளாவில் உள்ள "தென்னிந்தியாவின் நயாகரா" என அழைக்கப்படும் அத்திரப்பள்ளி அருவிக்கு ஒருமுறை 2017ஆம் ஆண்டின் மே மாதத்தில் சென்று வந்து இருக்கிறேன். சாலக்குடி ஆற்றின் நடுவே பரந்து விரிந்து, மலையின் மேல் இருந்து ஆர்ப்பரித்து கொட்டும் அருவியை அருகில் இருந்து பார்ப்பது அவ்வளவு ரம்மியமாக இருக்கும். பாகுபலி, பையா, வேட்டைக்காரன், புன்னகை மன்னன் என பல திரைப்படங்களில் இடம் பெற்ற அருவி அது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திற்பரப்பு அருவிக்கு நண்பர்களுடன் சில முறை சென்று இருக்கிறேன். அண்மையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொடிவேரி அருவிக்கு சென்று வந்தேன். இதே போல தேனி மாவட்டத்தில் உள்ள அணைபிள்ளையார் அருவிக்கு சில மாதங்களுக்கு முன்பு சென்று வந்தேன். இந்த மூன்று அருவிகளும் மிகவும் சிறிய உயரத்தில் இருந்து ஆற்றின் நடுவே இருந்து கொட்டும் அருவிகள். அருவிகள் எல்லாமே ஆறுகள் அல்லது ஓடைகள் நடுவே தான் அமைந்து இருக்கிறது. 

ஒருமுறை கோவா சென்று விட்டு சென்னைக்கு ரயிலில் திரும்பும் போது கோவா கர்நாடக எல்லையில் ஒரு அருவியை கண்டு ஆச்சரியப்பட்டு போனேன். அந்த அருவியின் பெயர் தூத்சாகர். சென்னை எக்ஸ்பிரஸ் திரைப்படத்தில் இந்த அருவியின் காட்சியை சிறப்பாக காட்சிப்படுத்தி இருப்பார்கள். மலை மீது இருந்து பால் அருவியாக கொட்டுவது போன்ற காட்சி அந்த ரயில் பயணத்தை இன்னும் அழகு ஆக்கியது. இப்படி பல அருவிகள் நாம் ரயிலிலே அல்லது சாலைப்பயணம் செய்யும் போது நம் பாதையில் குறுக்கிடும் குறிப்பாக மழைக்காலங்களில். இதே கோவா பயணத்தில் ஒரு அருவியை பார்க்க பல கிமீ பைக் ரைட் போய் தண்ணீர் இல்லாத வற்றிய அருவியை பார்த்து ஏமாற்றத்துடன் திரும்பிய அனுபவமும் எனக்கு உண்டு. எல்லா அருவிகளும் குளிக்க ஏற்ற வகையில் இருக்காது. அருவிகள் எப்படி பார்க்க அழகாக இருக்கிறதோ அதே அளவு ஆபத்தானவையும் கூட. அப்படி சிறுத்தை நடமாட்டம் உள்ள மற்றும்  ஆழமும், சுழல்கள் நிறைந்த அருவிக்கு நண்பன் விஜய் ஆனந்த் உடன் சென்று இருந்தேன். அந்த அருவி திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் - பழனி சாலையில் இருந்து இடதுபுறம் திரும்பி இரண்டு கிமீ தொலைவில் ஒரு மலையடிவாரத்தில் உள்ள தலைக்குத்து என்னும் அருவி. அதன் அழகை ஆபத்தோடு சேர்த்து பார்த்து ரசித்து வந்தேன். 


நான் செல்லும் பயணங்களில் எங்கெல்லாம் அருவிகள் இருக்கிறதோ அங்கெல்லாம் தவறாமல் சென்று வந்து விடுவேன். பல அருவிகளுக்கு செல்ல வேண்டும் என்ற என் கனவு பட்டியல், தமிழகத்தில் இருக்கும் அருவிகளில் இருந்து அமெரிக்கா கனடா எல்லையில் உள்ள அருவி வரை நீள்கிறது. விரைவில் இந்த கொரோனா பெரும் தொற்று முடிந்த பின்பு என் பட்டியலில் உள்ள அருவிகளுக்கு எல்லாம் நிச்சயம் ஒரு விசிட் சென்று வர வேண்டும் என ஒரு ஆசை எனக்கு உண்டு. நீங்களும் அருவி தரும் ஆனந்ததையும் ஆச்சரியத்தையும் வாய்ப்பு கிடைக்கும் போது எல்லாம் பெற்று கொள்ளுங்கள். 

"There is a hidden message in every waterfall. It says, if you are flexible, falling will not hurt you!"

- பயணங்கள் தொடரும்.

(This blog article is dedicated to my Junior friend Sneha Saji, one who reads my blog articles continuously by translating the article from Tamil to English using Google Translate from Muscat, Oman)

ஆகபெரும் அதிசயம் அருவி

“Waterfalls are exciting because they have power, they have rainbows, they have songs, and they have boldness and craziness!” - Unknown ...